திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த வாசுதேவன் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமாரி. இவர் தெரிந்தவர்களுக்கு மட்டும் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். குமாரி அதே பகுதியை சேர்ந்த சம்பத்து என்பவரிடம் ரூபாய் 2 லட்சம் வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார். சம்பத் பணத்தை திருப்பி கொடுக்காமல் குமாரியை வெகு நாட்களாக அலைக்கழித்து வந்துள்ளார். இருப்பினும் காலதாமதமாக சிறுக சிறுக பணம் கொடுத்து சம்பத் தான் வாங்கிய அசல் தொகையை முழுமையாக கட்டி முடித்துள்ளார்.
கடன் கொடுத்த தொகையை திரும்ப பெற்ற குமாரி சம்பத்தை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வட்டி பணத்தை கேட்டுள்ளார். சம்பத் வட்டியை தன்னால் கட்ட முடியாது அசல் தொகையை விட வட்டி அதிகமாக வந்துள்ளது என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது அப்போது ஆத்திரமடைந்த சம்பத் மூதாட்டி வீட்டின் வாசற்படியில் இருந்த கருங்கல்லை எடுத்து மூதாட்டியின் தலையில் தாக்கியதில் மூதாட்டி கடந்த (செப் 16) ஆம் தேதி இரவு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
மூதாட்டி உயிரிழந்ததை அறிந்த சம்பத் இது வெளியில் தெரியாமல் இருக்கு மூதாட்டியின் கை, கால்களை கட்டி அவரது உடலை சாக்கு மூட்டையில் போட்டு இரவு யாருக்கும் தெரியாமல் அந்த மூட்டையை அருகில் உள்ள கிணற்றில் தூக்கி வீசிவிட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். சில தினங்கள் கழித்து மூதாட்டியின் சடலம் கிணற்று நீரில் மிதந்து துர்நாற்றம் வீசுவதை அவ்வழியாக சென்ற நபர் கண்டு கிராம மக்களுக்கும் பாச்சல் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளார்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற துணை காவல் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையிலான காவல் ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் காவல்துறை துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது ஊர் மக்களோடு நின்று சம்பத்தும் எதுவும் தெரியாதது போல் வேடிக்கை பார்த்துள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் காவல்துறையினருக்கு சம்பத் மூதாட்டியை கொலை செய்து கிணற்றில் வீசியது தெரியவந்துள்ளது. பின்னர் கொலை செய்த சம்பத்தை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.