க்ரைம்

“தம்பியின் கை கால்களை தனியாக வெட்டிய அண்ணன்” - சாமிக்கு பூஜை போட்ட போது நடந்த கொடூரம்… ரத்தம் சொட்டும் அரிவாளுடன் சரணடைந்த நபர்!

கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து இளவரசன் விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பி உள்ளார்...

Mahalakshmi Somasundaram

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம், களிமுத்தன் வட்டம் பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகன் 45 வயதுடைய இளவரசன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். இளவரசனுக்கு அவரது பெரியப்பாவான செல்வன் என்பவரது மகன் 47 வயதுடைய சத்யன் என்பவருக்கும் இடையே 8 ஏக்கர் அளவிலான நில தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தீர்ப்பு வந்திருக்கிறது. இதற்கிடையில் இளவரசன் வேலைக்காக சிங்கப்பூர் சென்றிருக்கிறார். இந்த நிலையில் நிலத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க மீண்டும் அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து இளவரசன் விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பி உள்ளார்.

அப்போது அந்த கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்ற போது மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இளவரசன் கிணற்றில் இருந்த பைப் லைன் தனக்கு சொந்தம் என வெட்டி வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து இளவரசன் நிலத்தில் இருந்த வேப்ப மரத்தை வெட்டுவதற்கு பூஜை போட்டு வந்திருக்கிறார். அப்போது மீண்டும் மரம் வெட்டுவது தொடர்பாக அண்ணன் தம்பி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சத்யன் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளவரசனை வயிற்றுப் பகுதியில் சராமாறியாக குத்தியுள்ளார். மேலும் கை கால்களையும் வெட்டிய நிலையில் படுகாயமடைந்த இளவரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது இளவரசன் உயிரிழந்ததை அறிந்த அண்ணன் சத்யன் தானாகவே நாட்றம்பள்ளி காவல் நிலையம் சென்று சரண் அடைந்தார். இது குறித்து வழக்கு செய்த நாட்றம்பள்ளி போலீசார் இளவரசன் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கிணற்று பிரச்சனை காரணமாக அண்ணனே தம்பியை குத்திக் கொலை செய்த சம்பவம் நாட்றம்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.