திருப்பத்தூர் அருகே பேராம்பட்டு சகாதேவன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் 37 வயதுடைய சக்திவேலு. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 27 வயதுடைய சோனியா என்பவருக்கும் திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். சக்திவேலுவின் தூரத்து உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (21) என்பவர் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். இவர் அடிக்கடி சக்தி வேலுவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றிருக்கிறார். அப்போது ஆகாஷுக்கும் சோனியாவிற்கு இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. அப்போது மனைவியின் நடத்தையில் கணவன் சக்திவேலுக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரைக் கண்காணிக்க தொடங்கிய போது இருவரும் கடந்த இரண்டு மாதங்களாக கள்ளக்காதலில் இருப்பது தெரியவந்துள்ளது.
சோனியாவுக்கும் ஆகாஷுக்கும் இடையிலான கள்ள உறவு தெரியவந்ததைத் தொடர்ந்து, சக்தி வேல் மனைவியைக் கண்டித்துள்ளார். இதனால் தம்பதியருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், கோபமடைந்த சோனியா அடிக்கடி தாய் வீட்டிற்கு செல்வதும், பின்னர் பெற்றோர் சமாதானப்படுத்திய பிறகு மீண்டும் கணவர் வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இதனால், ஆகாஷை சந்திக்க முடியாத விரக்தியிலும், தனது உறவு குறித்து கணவர் குடும்பத்தினரிடம் கூறியதால் ஏற்பட்ட ஆத்திரத்திலும் இருந்த சோனியா, கணவர் உயிருடன் இருக்கும் வரை தனது கள்ள உறவைத் தொடர முடியாது என்று முடிவு செய்து, அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்தத் திட்டத்தை ஆகாஷிடம் தெரிவித்த அவர், ஆகாஷ் மற்றும் அவரது நண்பர் குமரவேலுடன் சேர்ந்து கொலை முயற்சிக்கு திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, கடந்த 25-ஆம் தேதி இரவு சுமார் 10.30 மணியளவில், "நல்ல தூங்கிட்டான்.. இப்போ வா கொன்னுடலாம்" என்று சோனியா, ஆகாஷுக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆகாஷும், அவரது நண்பர் குமரவேலும் சக்திவேலுவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவன் கால்களை சோனியா பிடித்துக் கொண்டதாகவும், குமரவேல் அவரது கைகளை இறுக்கமாகப் பிடித்ததாகவும், அதன்பின்னர் ஆகாஷ் தலையணையால் முகத்தை அழுத்தி மூச்சுத்திணறடித்து கொலை செய்ய முயன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
ஆனால், உயிர் தப்பிக்க போராடிய சக்திவேல் அவர்களிடமிருந்து தப்பித்து வெளியே ஓடி, "காப்பாத்துங்க... காப்பாத்துங்க..." என்று சத்தமிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததைத் தொடர்ந்து, மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில் திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். தலைமறைவான குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், சோனியாவும் ஆகாஷும் வெளியூருக்கு தப்பிச் செல்ல முயன்றபோது திருப்பத்தூர் புதுப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் வைத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய குமரவேல் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை கைது செய்ய திருப்பத்தூர் கிராமிய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கணவரைக் கொலை செய்து கள்ள உறவைத் தொடர சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் இந்த சம்பவம் பேராம்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.