வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ராஜக்கல் கூத்தாண்டவர் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி இவர்கள் இருவரும் 17 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். தனலட்சுமி திருமணம் முடிந்த பின் ஆம்பூரில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்ததாகவும், தற்போது ஷூ கம்பெனிக்கு வேலைக்கு செல்லாமல் 8 மாதமாக பேரணாம்பட்டில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனலட்சுமி வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக அவரது நடத்தையில் கணவர் விஜயகுமாருக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் மனைவி தனலட்சுமி கள்ளக்காதலனுடன் தனது மகளை அழைத்து கொண்டு ஆம்பூரில் உள்ள சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளார். படம் பார்த்துவிட்டு வீடு திரும்பும் போது தனலட்சுமி தனது மகளிடம், “அப்பாகிட்ட இத பத்தி சொல்ல கூடாது” எனத் தெரிவித்துள்ளார்
ஆனால் தனலட்சுமியின் மகள், இது குறித்து தனது அப்பா விஜயகுமரிடம் அம்மா வேறு ஒருவருடன் சினிமாவிற்கு சென்று, அப்பாவிடம் சொல்ல வேண்டாம் என தெரிவித்ததாக கூறியுள்ளார். இந்த சம்பவம் தனலட்சுமி மீது மீண்டும் கடும் கோபத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று விஜயகுமார் தனது மனைவி தனலட்சுமி இரண்டு நாட்களாக காணவில்லை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என அங்குள்ள அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அதையடுத்து அக்கம் பக்கத்தினர் விஜயகுமாரின் வீட்டருகே சென்றபோது கடுமையான துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் உடனடியாக பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபுவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் சமையலறையில் உள்ள ஸ்லாப்பின் மீது ரத்த கரையுடன் சாக்கு மூட்டை இருந்துள்ளது. அதனைத் திறந்து பார்த்தபோது தனலட்சுமி கை மணிக்கட்டுகள் அறுக்கப்பட்ட நிலையிலும் இரண்டு கால்கள் செல்போன் சார்ஜர் ஒயரால் கட்டப்பட்டு முகம் சிதைந்து அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் கணவர் விஜயகுமாரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் விஜயகுமார் தனது மனைவி இரண்டு நாட்களாக காணவில்லை என்றும் மனைவி செல்போனுக்கு போன் செய்தால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் தனது மனைவி தனலட்சுமி எப்படி இறந்தார் எனவும் தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.
ஆனாலும் போலீசாருக்கு கணவர் விஜயகுமார் கூறிய பதில்கள் மேலும் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து போலீசார் வீட்டினை தீவிர சோதனை செய்த போது ரத்தக்கரை படிந்த துணியும் வெட்டப் பயன்படுத்திய அரிவாளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் தனலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கைரேகை தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கொலை நடந்த வீட்டையே சுற்றி சுற்றி வந்ததால் இன்ஸ்பெக்டர் பிரபு தனலட்சுமி கணவர் விஜயகுமாரை பேரணாம்பட்டு காவல் நிலையம் அழைத்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தியுள்ளார்.
விசாரணையில் கணவர் விஜயகுமார் அளித்த வாக்குமூலம் போலீசாரையே அதிர வைத்துள்ளது. கள்ளகாதல் தொடர்பாக கணவன் - மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தொடர்ந்து மனைவி வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பில் இருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவி தனலட்சுமியை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். அதையடுத்து குடியாத்தம் அருகே உள்ள பள்ளிகொண்டாவிற்கு சென்று அங்கு வெட்டு அருவாளை வாங்கி வந்து வீட்டில் மறைத்திறந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை அன்று இரவு 11 மணிக்கு மனைவி தனலட்சுமியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து வீட்டில் சமையல் அறை ஸ்லாப்பில் மீது சாக்கு பையில் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு மனைவி காணாமல் போனதாக நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரிந்துள்ளது. இதையடுத்து கணவர் விஜயகுமாரை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
கள்ளக்காதல் சந்தேகத்தால் சொந்த மனைவியை கொடூரமாக கொலை செய்து மூட்டையில் கட்டி வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.