தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த திருகண்ணன் என்பவரின் மனைவி கலாவதி (62), வயதான இவர் அங்கன்வாடி மேற்பார்வையாளராக இருந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்ததம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள், அனைவருக்கும் திருமணமாகி சென்னையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி அதிகாலை வீட்டின் வாசலில் கணவர் திருக்கண்ணன் படுத்திருந்தபோது, வீட்டின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த கலாவதி கழுத்தில் பல வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு உயிரிழந்து கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த சுமார் 15 பவுன் தங்க நகைகள் திருடு போய் உள்ளது என்று காடல்குடி காவல் நிலையத்திற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜபாண்டி என்பவரின் மகன் திருமேனி முருகன் (25) செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து தகவல் அறிந்த காடல்குடி காவல் நிலைய போலீசார், கொலை நடந்த இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் கலாவதியின் பிள்ளைகள் சென்னையிலிருந்து வந்தால் மட்டுமே வீட்டில் உள்ள கலாவதியின் உடலை எடுக்க விடுவோம் என்று உறவினர்கள் காவல்துறையினரிடம் எதிர்ப்பு தெரிவித்தனர். விசாரணையை தொடங்கிய காவல்துறை மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலை நடந்த இடத்தில் தடயங்களை தீவிர ஆய்வு மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்ட கலாவதியின் பிள்ளைகள் சென்னையிலிருந்து வந்ததை தொடர்ந்து, கலாவதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காடல்குடி காவல் நிலைய போலீசார் கலாபதியின் உடலை விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து, உடற்கூறு ஆய்வு முடிந்தவுடன் உறவினரிடம் ஒப்படைத்தனர்.
தீவிர விசாரணையை தொடங்கி, நான்கு நாட்கள் ஆகியும் கொலையாளியை கண்டுபிடிப்பதில் காவல்துறையினருக்கு பின்னடைவு மட்டுமே ஏற்பட்டு வந்தது. மேலும் அதே கிராமத்தில் நான்கு மாதங்களுக்கு முன்பு துரைசிங்கம் என்பவரின் மனைவி பேச்சியம்மாள் என்ற மூதாட்டியை (70) அடித்துக்கொலை செய்து கை,கால்களை கட்டி கிணற்றில் தூக்கி போட்டு கொலை செய்த வழக்கில், மூதாட்டி பேச்சியம்மாளின் மகனான சக்திவேல் மற்றும் அவரது நண்பரான முருகனை கைது செய்தனர். சக்திவேல் மற்றும் முருகன் குடும்ப வறுமையின் காரணமாக தனது பெற்ற தாயை கொலை செய்து அவரிடம் இருந்த நகையை எடுத்தோம் என்று காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்தனர். தற்போது நிபந்தனை ஜாமீனில் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வரும் சக்திவேல் மற்றும் முருகன் ஆகியோர்தான் செய்திருக்க வேண்டும் என்று காவல்துறையினர் சக்திவேல் மற்றும் முருகனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் அவர்களுக்கு இந்த கொலை வழக்கில் சம்பந்தமில்லை என்று காவல்துறையினர் இறுதியாக தெரிந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து காலாவதியின் வீட்டின் அருகே உள்ள ஒரு சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது, கலாவதியின் வீட்டின் அருகே நான்கு இளைஞர்கள் படுத்திருந்ததும், அதில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதே கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டி என்பவரின் மகன் திருமேனி முருகன் என்பவன் மட்டும் காணாமல் போனதும் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் திருமேனி முருகனை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
காவல்துறையின் கேள்விகளுக்கு திருமேனி முருகன், “கலாவதி எனது பெரியம்மா உறவு முறை வருபவர். கடந்த 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு எனது பெரியம்மா வீட்டிற்கு நான் பசியோடு சென்றேன், எனக்கு எனது காலாவதி பெரியம்மா தோசை சுட்டுக்கொடுத்தார், நான் சாப்பிட்டு வீட்டை விட்டு வெளியே வரும்போது எனக்கு செலவுக்கு 500 ரூபாயும் கொடுத்தார், நான் எப்படி எனது பெரியம்மாவை கொலை செய்வேன்? என்று காவல்துறையிடமே தான் ஒரு நிரபராதி போல் பேசி ஏமாற்றியுள்ளார். மேலும் திருமேனிமுருகன் தான் அந்த பகுதிகளில் நடக்கும் சட்டவிரோத மது விற்பனை, புகையிலை விற்பனைகளை உடனடியாக காவல்துறையினருக்கு தெரிவித்து காவல்துறையினரிடம் நட்பாக பழகி வந்ததும் தெரியவந்தது. இதனால் காவல் துறையினரை ஏமாற்றி வந்துள்ளார்.
பின்னர் காவல்துறையினர் திருமேனி முருகனிடம் கடந்த 6-ம் தேதி இரவு முதல் கடந்த 7-ம் தேதி அதிகாலை வரை உனது செல்போன் ஆன்லைனில் இருந்தது எப்படி? அதிகாலை 4 மணி அளவில் கலாவதியின் வீட்டினருகே சென்றது ஏன்? என விசாரணையை தங்கள் பாணியில் தொடங்கினர். அதில் திருமேனி முருகன் அருகே உள்ள கிராமத்தில் தனது காதலியை பார்க்க சென்று விட்டு 7-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கலாவதியின் வீட்டின் அருகே சென்றது தெரியவந்தது. கலாவதி உள்ளே படுத்திருந்தார்,அவரது கணவர் திருக்கண்ணன் வீட்டு வாசலில் படுத்திருந்தார். இதனை கவனித்து வீட்டின் பின்புறமாக சென்று கடப்பாரை கம்பியால் கலாவதியின் கழுத்தில் குத்தி கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த தாலிக்கொடி உட்பட 10 பவுன் தங்க நகை எடுத்து சென்று சென்றுள்ளார். ஒருக்கு வெளியே உள்ள சுடுகாட்டில் தங்க நகைகளை புதைத்து விட்டு வந்து பார்த்தபோது கலாவதி கொலை செய்யப்பட்டு உயிரிழந்தது கிராமம் முழுவதும் தெரிந்துள்ளது. உடனடியாக காவல்துறையினருக்கு தொடர்புகொண்ட திருமேனி முருகன், “கலாவதி பெரியம்மா கொலை செய்யப்பட்டு உயிரிழந்து கிடக்கிறார்” என்று முதல் ஆளாக தகவல் தெரிவித்து காவல்துறையின் பார்வையை திசை திருப்பிவிட்டேன் என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து தங்க நகை எங்கே என்று காவல்துறையினர் கேட்டபோது, காவல்துறையினருடன் விளாத்திகுளம் பஜார் பகுதியில் உள்ள அடகு கடைக்கு வந்து, நான் அடகு வைத்த தங்கயை எடுத்துத் தாருங்கள் என்று அடகு கடை காரரிடம் கேட்டுள்ளார். அந்த அடகு கடைக்காரர் ஏற்கனவே திருமேனி முருகன் அடகு வைத்த "பாம்பட"தங்க கம்மலை எடுத்துக் கொடுத்துள்ளார், கலாவதியோ பாம்பட கம்மல் அணிவது கிடையாது, இந்தக் கம்மல் யாருக்கு? என்று போலீசார் மீண்டும் விசாரணை தொடங்கிய நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி பேச்சியம்மாளின் தங்கப்பாம்பட கம்மல் என்பது விசாரணையில் தெரியவந்தது. பேச்சியம்மாளை அவரது மகனான சக்திவேல் அவரது நண்பரான முருகன் மற்றும் திருமேனி முருகன் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் மீண்டும் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். அதேபோல் காடல்குடி அருகே உள்ள சுந்தர பச்சையாபுரம் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பட்டப் பகலில் வீட்டிலிருந்த 15 பவுன் தங்க நகை திருடு போன வழக்கிலும் திருமேனி முருகனுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இத்தனை சம்பவங்களையும் திருமேனி முருகன் மட்டும் தான் செய்தாரா? அல்லது இவர்களுக்கு கூட்டாளிகள் யாரும் இருக்கிறார்களா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் 25 வயதான திருமேனி முருகன் பலமுறை காவல்துறை வேலைக்கு முயற்சி செய்து வந்தார் என்பதும், திருமேனி முருகனை “சண்டி என்ற சண்டியர்” என்று அடைமொழியுடன் அக்கிராமத்தினர் அழைப்பது வழக்கமாக உள்ளது என்று கூறப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக எந்த வேலைக்கும் செல்லாத திருமேனி முருகனுக்கு "ஒரு விவசாய டிராக்டர், ஒரு கார்,என்ஃபீல்டு பைக், மற்றொரு பைக், வங்கிக் கணக்கில் பல லட்சம் ரூபாய்" இவையெல்லாம் எப்படி வந்தது என்று காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருமேனி முருகனை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் கொலை செய்யப்பட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.மேலும் திருமேனி முருகனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட பேச்சியம்மாள் என்ற மூதாட்டி கொலை வழக்கிலும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.