மாவட்டம்

பெரிய ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம்...

உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 466ஆம் ஆண்டு கந்தூரி விழாவின் சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.

Malaimurasu Seithigal TV

நாகப்பட்டினம் | நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 466ஆம் ஆண்டு கந்தூரிவிழா கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்கூடு ஊர்வலம் இன்றிரவு நாகை யாஹூசைன்  பள்ளி தெரு வாசலில் இருந்து துவங்கியது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு, ஊர்வலத்தை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், நாகை எஸ்பி ஜவஹர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நாகப்பட்டினத்திலுள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்ற சந்தன கூட்டின் மீது, வழி நெடுகிலும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான மும்மதத்தினரும் பூக்களை தூவி வழிபட்டனர். ஸ்தூபி இசை நடனத்துக்கு ஏற்றவாறு கோலாட்டம், தாரைதப்பட்டைகள், நையாண்டி மேளம், பேண்டு வாத்தியங்கள் என கோலாகலமாக நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலத்தில்  நடனமாடி இளைஞர்கள் உற்சாகம் அடைந்தனர்.

கால்மாட்டு வாசலில் சந்தனக்குடங்கள் இறக்கப்பட்டு, நாகூர் ஆண்டவர் சமாதியில் பாரம்பரிய முறைப்படி தர்ஹா நிர்வாகிகளுல் ஒருவரான கலீபா மஸ்தான் சாஹிப் சந்தனம் பூசினார். இந்த நிகழ்ச்சியில், தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். 

இந்த சந்தனக்கூடு ஊர்வலம், அதிகாலை 4 மணிக்கு நாகூர் தர்கா வந்தடைந்த நிலையில், நாகூர் ஆண்டவர் சமாதியில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது. ஊர்வலம் முன்னிட்டு நாகை மாவட்ட காவல்துறை சார்பாக 1050 காவலர்கள் , 150 ஊர்க்காவல்படை வீரர்கள் விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.