மாவட்டம்

“குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த தந்தை” - வயிறு உப்பி இறந்து கிடந்த சிறுமிகள்.. மகள்களின் காலடியில் வாலிபர் செய்த செயல்!

தனது இரண்டு பெண் குழந்தைகளை தன்னுடன் அழைத்து கொண்டு கணவரை பிரிந்து அவரது தாய் வீட்டிற்கு சென்றதாக...

Mahalakshmi Somasundaram

மதுரை மாவட்டம், முடக்கத்தான் அம்பேத்கர் காலனி பகுதியை சேர்ந்தவர் 39 வயதுடைய கோபிராஜ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 29 காயத்ரி என்பவருக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களுக்கு 10 வயதில் யுவஸ்ரீ மற்றும் 5 வயதில் கனிஷ்கா என இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். கோபிராஜ் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் உள்ள மருத்துவமனையில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். எனேவ மாட்டுத்தாவணி பகுதியில் தனியாக வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

கோபிராஜ் மற்றும் அவரது மனைவி காயத்ரிக்கு இடையே அடிக்கடி கருது வேறுபாடு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு வழக்கம் போல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த காயத்ரி தனது இரண்டு பெண் குழந்தைகளை தன்னுடன் அழைத்து கொண்டு கணவரை பிரிந்து அவரது தாய் வீட்டிற்கு சென்றதாக சொல்லப்படுகிறது. பின்னர் காயத்ரியை சமாதானப்படுத்திய அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கோபிராஜுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கோபிராஜ் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் குடும்பத்தோடு இருந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது மீண்டும் மனைவி காயத்ரி தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் குழந்தைகள் அவர்களது தந்தையுடன் மாட்டுத்தாவணியில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் கோபிராஜ் தனது இரு மகள்களுடன் வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் இன்று மதியம் கோபிராஜ் குளிர்பானத்தில் விஷம் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து இருவரும் மயங்கிய நிலையில் கழுத்தை ஒயரை வைத்து நெரித்து விட்டு குழந்தைகள் உயிரிழந்த உடன், அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கோபிராஜ் பணிக்கு செல்லாத நிலையில் நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாமல் இருந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்த போது தந்தை மற்றும் இரு பிள்ளைகள் என மூவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளனர்.

இதையடுத்து கூடல்புதூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் பிளவர்ஷீலா தலைமையிலான காவல்துறையினர் உயிரிழந்த மூவர் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த இரண்டு பெண் குழந்தைகளும் அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று நன்கு பழகி வந்தவர்கள் என்பதால் இரு குழந்தைகள் இறந்த உடலைப் பார்த்து தெருவில் உள்ள அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர்.

கோபிராஜ் தற்கொலை செய்வதற்கு முன்பாக இரண்டு பக்க கடிதம் எழுதி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்தபிறகே தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என தெரிவித்துள்ளனர். மதுரையில் பிறந்த நாள் கொண்டாட இருந்த மகளை விஷம் கொடுத்து கொன்று விட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.