ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த மாகாணிப்பட்டு கிராமம், மேட்டு தெருவைச் சேர்ந்தவர் 34 வயதுடைய வினோத். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த காயத்ரி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்த நிலையில் கடந்த ஆண்டு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. வினோத் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் காயத்ரி வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்து வந்துள்ளார்.
தற்போது மூன்று வயதாகும் மூத்த மகன் சாம் தினந்தோறும் தெருவில் உள்ள மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதை வழக்கமாக இருந்துள்ளார். அதே போல் நேற்று வினோத் வேலைக்கு சென்ற நிலையில் காயத்ரி வீட்டு வேலைகளை செய்து வந்திருக்கிறார். எனவே சாம் தனது நண்பர்களுடன் விளையாட வெளியே சென்று விளையாடு கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சாமின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து சிறுவனை மீட்டு அருகில் இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்து பரிசோதனை செய்தபோது சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். மேலும் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது தெரியாமல் பலூனை விழுங்கியது இறப்பிற்கு காரணம் என மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளார்.
தொடர்ந்து வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயிரிழந்த சிறுவனின் உடலை பிரேத பரிசோதனை எதுவும் இல்லாமல் தங்களிடம் வழங்குமாறும் கோரிக்கை வைத்திருக்கின்றனர். இறந்த சிறுவனின் உடலை பார்த்து தாய் “நைனா நீ இறக்கவில்லை தூங்கிக் கொண்டுதான் இருக்கிறாய், எழுந்திரு எழுந்திரு” என மருத்துவமனையில் கதறி அழுத காட்சிகள் காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.