மாவட்டம்

“பக்கத்துக்கு வீட்டில் நடந்த விபச்சாரம்” - கண்டித்த 70 வயது முதியவர்.. சம்பந்தமே இல்லாமல் பறிபோன சாந்தியின் உயிர்!

இதனை அக்கம் பக்கத்தினர் வேடிக்கை பார்த்த நிலையில் கடும் மன உளைச்சல் அடைந்த..

Mahalakshmi Somasundaram

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு அடுத்த பண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் பெலிக்ஸ் என்பவரின் மனைவி 51 வயதுடைய ஜோதி சாந்தி. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் பெண்ணான பாத்திமா என்பவரின் வீட்டிற்கு பலர் வந்து சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக இங்கு விபச்சாரம் நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் மற்றொரு நபரான 70 வயதுடைய பிரான்சிஸ்கோ என்பவர் சம்பந்தப்பட்ட பாத்திமா தரப்பிடம் இது குறித்து கேட்டு கண்டித்துள்ளார்.

பிரான்சிஸ்கோ பாத்திமாவை கண்டித்ததற்கு ஜோதி சாந்தி தான் காரணம் என கருதிய பாத்திமா மற்றும் அவரது உறவினர்களான ஏஞ்சல், கீதா, கஷ்யா, எழில் ஆகியோர் நேற்று முன்தினம் ஜோதி சாந்தியின் வீட்டிற்கு சென்று ஆபாசமாக தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை அக்கம் பக்கத்தினர் வேடிக்கை பார்த்த நிலையில் கடும் மன உளைச்சல் அடைந்த ஜோதி சாந்தி வீட்டில் உள்ள படுக்கயறைக்கு சென்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த இவரது மகன் ஆண்ட்ரூ, மகள் ஜேன்ரெனி கிளாடிஸ் ஆகியோர் ஜோதி சாந்தியை மீட்டு சந்தவேலுார் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

சுகாதார நிலையத்தில் ஜோதி சாந்தியை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த மப்பேடு போலீசார் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் . இந்நிலையில் பெண்ணின் தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையை கண்டித்து உறவினர்கள் மப்பேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த காவல் ஆய்வாளர்கள் மப்பேடு சுரேந்திரன், திருவள்ளூர் அந்தோணி ஸ்டாலின் பெண்ணின் உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் புகாரின் பேரில் இரண்டு பேரை கைது செய்த மப்பேடு போலிசாரிடம் திமுக சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் சிபாரிசு செய்ததால் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே தற்கொலை செய்ய தூண்டியவர்கள் மீது விசாரணை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்ததால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.

இதனைத்தொடர்ந்து உடற்கூறு ஆய்வுக்கான முடிவு தெரியாமல் உடலை வாங்கப் போவதில்லை எனவும் தெரிவித்தனர். ஆனால் 2 நாளைக்குள் உடற்கூறு சான்றிதழ் வாங்கி கொடுப்பதாகவும் போலீசார் உத்திரவாதம் அளித்தனர் பிறகு இந்த வழக்கு தற்கொலைக்கு தூண்டியதாக பதிவு செய்யப்படும் எனவும் கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்ததால் பெண்ணின் உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.