பவன் கல்யாணின் ரசிகையான நோயாளிக்கு, அறுவை சிகிச்சையின் போது அவர் சுயநினைவுடன் இருப்பதற்காக, பொது மயக்க மருந்து இல்லாமல் மூளை அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. எனவே, குண்டூர் மாவட்டம் வட்லமுடியில் உள்ள DVC மருத்துவமனை மருத்துவர்கள், அவர் பவன் கல்யாணின் தீவிர ரசிகை என்பதால் 'OG' திரைப்படத்தை அறுவை சிகிச்சை மேசைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த மடிக்கணினியில் ஓடவிட்டபடியே, அந்தப் பெண்ணுக்கு வெற்றிகரமாக மூளை அறுவை சிகிச்சையைச் செய்துள்ளனர்.
பிரகாசம் மாவட்டம், தர்சியைச் சேர்ந்த கனிபிசெட்டி ராகவலு மற்றும் கோட்டேஸ்வரம்மா ஆகியோர் 'கிச்சடி' கடை நடத்தி தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டி வருவதாக கூறப்படுகிறது. சில காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த கோட்டேஸ்வரம்மா, சமீபத்தில் வலிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து மயங்கி விழுந்தார். அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை டி.வி.சி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் பத்மநாபுனி அருண் குமாரின் மேற்பார்வையில், எம்.ஆர்.ஐ உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதில், அவருக்கு மூளைக் கட்டி இருப்பது தெரியவந்தது. நோயாளிக்கு பொது மயக்க மருந்து கொடுக்காமல், அவர் சுயநினைவுடன் இருக்கும்போதே அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை இருந்ததால், மருத்துவக் குழுவினர் ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நடித்த 'OG' திரைப்படத்தைத் திரையிட்டுக் காட்டியுள்ளனர்.
நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் பத்மநாபுனி அருண் குமார் மற்றும் மயக்க மருந்து நிபுணர் ராஜசேகர் தலைமையிலான மருத்துவர் குழு, மூளை கட்டியை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். மருத்துவமனையின் தலைவர் துளிபல்ல நரேந்திர குமார், எம்.டி.துளிபல்லா ஜோதிர்மயி, உள்ளிட்ட மருத்துவக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.