பொழுதுபோக்கு

மோனலிசா திருமணம் லவ் ஜிஹாத்தா? விமர்சனங்களுக்கு பதிலடி தந்த கும்பமேளா அழகி!

எங்கள் திருமணத்தை 'லவ் ஜிஹாத்' எனக் கூறுகின்றனர், ஆனால் நாங்கள் இந்து முறைப்படிதான் திருமணம் செய்துள்ளோம்

மாலை முரசு செய்தி குழு

மகா கும்பமேளாவில் பாசிமணி விற்று வந்த மோனலிசா போஸ்லே என்ற பெண், தனது அழகிய கண்களால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவரது வீடியோ வைரலானதை தொடர்ந்து இவருக்கு சினிமா வாய்ப்புகளும் நிறைய தேடி வந்தன. தற்போது இவருக்கு ஃபர்மான் கான் என்ற அவரது காதலரோடு கேரளத்தில் திருமணம் ஆகியுள்ளது. இதனை பலரும் 'லவ் ஜிஹாத்' என்று விமர்சித்து வந்த நிலையில், இந்த புது தம்பதியினர் அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தின் நடைபெற்ற மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகளை விற்ற வீடியோக்கள் வைரலானதிற்கு பிறகு கடந்த ஆண்டு பெரும் புகழை பெற்றார் மோனலிசா போஸ்லே, தற்போது இவருக்கு மாடல் மற்றும் நடிகருமான ஃபர்மான் கான் என்பவரோடு கேரள மாநிலத்தில் உள்ள பூவார் அருமனூர் நயினார் கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். அதனால் படப்பிடிப்புக்காக திருவனந்தபுரம் வந்திருந்த மோனலிசா கேரளத்தில் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். தனது தந்தையிடமிருந்து பாதுகாப்பு கோரி, தம்பனூர் காவல் நிலையத்தை அணுகினார் மோனலிசா. காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, மோனாலிசாவின் தந்தை அவரது விருப்பத்திற்கு மாறாக அவரை இந்தூருக்கு அழைத்துச் செல்ல முயற்சிப்பதாகவும், அவர் குற்றம் சாட்டினார். மோனலிசா தனது காதலன் மற்றும் படக்குழு உறுப்பினர்களுடன் காவல் நிலையத்திற்கு வந்து, தனது தந்தையுடன் திரும்பி செல்ல விரும்பவில்லை என்றும், தனது காதலரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார். இருவரும் மேஜர் என்பதால் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

தற்போது, இவர்கள் இருவரது திருமணத்தையும் பலரும் 'லவ் ஜிஹாத்' என்று விமர்சனம் செய்து வந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பதிலடி கொடுத்துள்ளார் மோனலிசா. "நான் வயது குறைந்தவள் என்ற செய்தி தவறானது. எனக்கு 18 வயது நிரம்பி விட்டது. மேலும் எங்கள் திருமணத்தை 'லவ் ஜிஹாத்' எனக் கூறுகின்றனர், ஆனால் நாங்கள் இந்து முறைப்படிதான் திருமணம் செய்துள்ளோம். நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன், ஒவ்வொரு மதத்தையும் சமமாகக் கருதுகிறேன்" என்று மோனலிசா கூறினார். அவர்களின் திருமணம் பதிவு செய்யப்பட்டதாக அவரது கணவர் ஃபர்மான் கான் உறுதிப்படுத்தினார். இவர்களை பற்றி பரவும் செய்திகள் போலியானவைகளே என்று மோனலிசா மற்றும் ஃபர்மான் கான் ஆகியோர் தெரிவித்துள்ளனர். கேரளம் ஒரு பாதுகாப்பான மாநிலம் தெரிந்ததால் இங்கு திருமணம் செய்துள்ளதாகவும் இவர்கள் கூறியிருக்கின்றனர்.

ஆறு மாதங்களுக்கு முன்பு, பி. பினு வர்கீஸ் இயக்கிய ' நாகம்மா ' என்ற மலையாளப் படத்தின் பூஜையின் போதுதான் தாங்கள் இருவரும் முதன்முதலில் சந்தித்ததாகக் கூறினர். இந்தப் படத்தில் ஃபர்மான் கான் முக்கிய வில்லனாகவும், மோனலிசா கதாநாயகியாகவும் நடித்திருந்தார். மேலும், கேரளத்தில் கிடைத்த ஆதரவால் தாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும், மாநிலத்தில் குடியேறுவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் அந்தத் தம்பதியினர் தெரிவித்துள்ளனர். "கேரளம் மிகவும் நல்ல மாநிலம், இங்குள்ள மக்கள் மிகவும் ஆதரவானவர்கள். மோனாலிசா இங்கே விரும்பினால், நாங்கள் தொடர்ந்து தங்கலாம்" என்று ஃபர்மான் கான் தெரிவித்திருக்கிறார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.