பொழுதுபோக்கு

“தங்கமான பையன் இவன்..” - மீண்டும் மணக்கோலத்தில் சூர்யா-ஜோ.. ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த போட்டோஸ்!

இந்த காதல் ஜோடி தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வெட்டிங் வீடியோ ஒன்று வைரல் ஆகியுள்ளது

Muthu Lakshmi

1999 ஆம் ஆண்டு வெளியான ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் சூர்யாவும் ஜோதிகாவும் முதன் முதலில் ஒன்றாக நடித்தனர். இந்த திரைப்படம் மற்றும் அவர்களின் ஜோடி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, உயிரிலே கலந்தது (2000), காக்க காக்க (2003), பேரழகன் (2004), மாயாவி (2005) மற்றும் சில்லுனு ஒரு காதல் (2006) போன்ற ஹிட் திரைப்படங்களில் நடித்திருந்தனர்.

கவுதம் வாசுதேவ் மேனனின் காக்க காக்க ஸ்டூடிங் பொது இருவரும் காதலிப்பதாக திரைத்துறையில் செய்திகள் உலவியது. அதை உறுதி செய்த இந்த காதல் ஜோடி 2006 செப்டம்பர் 7ம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர். அதைத் தொடர்ந்து, ஜோதிகா தனது தனிப்பட்ட வாழ்வில் கவனம் செலுத்துவதற்காக, சில காலம் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்தார். பின்னர் 2015-ல் தனது கணவர் சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளியான ‘36 வயதினிலே’ என்ற பெண்களை மையமாகக் கொண்ட திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு வந்தார். அந்த திரைப்படம் அவரின் கம்பேக்கிற்கு தீனி போட்டது. 

அதையடுத்து இருவரும் தங்களின் அடுத்தடுத்த திரைப்பயணத்தில் கவனம் செலுத்தினர். மேலும் இருவரும் தற்போதைய காதலர்களின் ‘Dream couple’- ஆக வலம் வந்தனர். அதற்கு காரணம் இருவரும் தங்களின் துணைக்கு கொடுக்கும் மரியாதையும், அவர்களின் கனவுக்கு துணை நிற்கும் குணாதிசயங்களும் இளம் ஜோடிகளை கவர்ந்தது. குறிப்பாக நடிகர் சூர்யாவிற்கு பெண் ரசிகர்கள் அதிகம் என்பதால் ‘சூர்யா மாறி ஒரு துணை’ வேண்டும் என்பதே பல பெண்களின் கனவாக இருந்தது. சமீபத்தில் சூரியா ஜோதிகாவின் ஒரு ‘Couple interview’ வைரல் ஆனது. அதில் இருவரும் பகிர்ந்த காதல் மற்றும் கல்யாண அனுபவங்கள் பலரை சிந்திக்க வைத்தது. மனைவிக்கு கொடுக்கும் மரியாதை, அவர்களின் கனவு, நேரம், குடும்பம் எல்லாமே முக்கியம் என்றும் “ஒரு ஆணுக்கு எப்படி எல்லாமே தேவையோ.. அதே போல் தான் ஒரு பெண்ணுக்கும் எல்லாமே தேவை” என்ற சூர்யாவின் விளக்கம் அப்போது இணையத்தில் வலம் வந்தது. பலரும் அதை பகிர்ந்து இந்த ஜோடியை பாராட்டினார். 

தற்போது அவர்களின் காதலில் மீண்டும் ஒரு வியப்புமிகு அத்தியாயத்தை எழுதியுள்ளனர். சூர்யா - ஜோதிகாவிற்கு, திருமணமாகி 20 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக தங்களது திருமண உறுதிமொழிகளைப் புதுப்பித்துக் கொண்டனர். இந்த காதல் ஜோடி தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வெட்டிங் வீடியோ ஒன்று வைரல் ஆகியுள்ளது. அந்தக் காணொளியில், சூர்யாவும் ஜோதிகாவும் ஒரு தேவாலயத்தில் தங்கள் திருமண உறுதிமொழிகளைப் புதுப்பித்துக் கொள்கின்றனர். அந்த நிகழ்வில் அவர்களின் பிள்ளைகளான தியா மற்றும் தேவ், சூர்யாவின் சகோதரரும் நடிகருமான கார்த்தி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் உள்ளனர்.

அதில் ஜோதிகா ஒரு வெள்ளை நிற கிறித்துவ வெட்டிங் ஸ்டைலிலும், சூர்யா வெள்ளை நிற சூட்டுடனும் திருமண கோலத்தில் தோற்றமளித்தனர். விழாவின் காணொளியைப் பகிர்ந்த ஜோதிகா, “எங்கள் 20 வருடக் காதலையும் போராட்டத்தையும் கொண்டாடும் ஒரு திருமண உறுதிமொழி புதுப்பிப்பு” என்று குறிப்பிட்டுள்ளார். இது ஒரு நிறைவான திருமணத்தின் கொண்டாட்டம் அல்ல.. இந்த திருமண வாழ்வு குறைகள், அனுசரிப்புகள், புரிதல், தியாகங்கள், ஒருவரையொருவர் தன்னலமின்றி நேசிப்பது ஆகியவற்றின் கொண்டாட்டம் தான்” என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் நான் தூரம் என நினைத்திருந்த கனவு தற்போது நினைவாகி உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திரைத்துறையில் காதலித்தது திருமணத்தில் முடிவது சிலருக்கே. அதை தாண்டி அந்த கல்யாண வாழ்வு பல வருடங்களாக ஒரு புரிதலோடு தொடர்வதும் சிலருக்கே. அந்த வரிசையில் இந்த ஜோடி தற்போது டாப்-க்கு வந்திருப்பதாக ரசிகர்கள் மற்றும் இளம் ஜோடிகள் அவர்களை வாழ்த்தி வருகின்றனர். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்