ரஜினி படத்தை ஏன் தயாரிக்கவில்லை? அர்ச்சனா கல்பாத்தி சொன்ன பதிலால் சர்ச்சை! 
பொழுதுபோக்கு

ரஜினி படத்தை ஏன் தயாரிக்கவில்லை? அர்ச்சனா கல்பாத்தி பதிலால் சர்ச்சை!

சினிமாவில் ரிஸ்க் மிகவும் அதிகம். அந்த ரிஸ்க்கை ஏற்க வேண்டும் என்றால் குறைந்தது 20 சதவீத லாபம் கிடைக்க வேண்டும். - அர்ச்சனா கல்பாத்தி

மாலை முரசு செய்தி குழு

தமிழ்சினிமாவில் வெற்றி பெறும் படங்களின் விழுக்காடு மிகக் குறைந்துள்ள சூழலிலும் வெற்றிகரமான நிறுவனமாக இயங்கிவருவது ஏஜிஎஸ். இதன் கிரியேடிவ் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் கொடுத்துள்ள நேர்காணல் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

அர்ச்சனா கல்பாத்தி அவரது தயாரிப்பில் வெளியான முந்தைய படங்கள், அவற்றின் லாப கணக்கு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து வந்தார்.

அப்போது ரஜினிகாந்த் படத்தை தயாரிக்கும் வாய்ப்பு கைவிடப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அர்ச்சனா, "பணத்தை வங்கியில் முதலீடு செய்தாலும் வட்டி கிடைக்கும். அதுபோல சினிமாவிலும் முதலீட்டிற்கு நியாயமான வருமானம் இருக்க வேண்டும்.

முதலீடு இழப்பாவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சினிமாவில் ரிஸ்க் மிகவும் அதிகம். அந்த ரிஸ்க்கை ஏற்க வேண்டும் என்றால் குறைந்தது 20 சதவீத லாபம் கிடைக்க வேண்டும்.

பட்ஜெட் கணக்கிடும் நிலையில் அதற்கான வாய்ப்பு இல்லை என்றால் அந்த படத்தை தயாரிக்க மாட்டோம்." என்று விளக்கமளித்தார்.

அர்ச்சனா ரஜினிகாந்தை குறிப்பிட்டு பேசவில்லை என்றாலும், இந்த கருத்து இணையத்தில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

சூப்பர் ஸ்டார் படத்தில் தயாரிப்பாளர்களுக்கு லாபம் வருவதில்லையா என்ற கேள்வியை சிலர் எழுப்பியிருக்கின்றனர்.

சிலர் தயாரிப்பாளராக அர்ச்சனாவின் கருத்து நியாயமானதே எனக் கருதுகின்றனர்.

ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் படத்தை தயாரிக்கும்போது கூட லாபகணக்கு தான் முக்கியமா என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.

மேலும் அர்ச்சனா கல்பாத்தி, எல்லா தயாரிப்பாளர்களும் இந்த வணிக ரீதியான தெளிவுடனே படத்தை தயாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.