சிறுநீரகக் கற்கள் (Kidney Stones) என்பது இன்றைய காலத்தில் பலரையும் வாட்டும் ஒரு கடுமையான வலியாகும். போதிய அளவு தண்ணீர் குடிக்காததே இதற்கு முதன்மைக் காரணம். ஒரு மனிதன் ஒரு நாளைக்குக் குறைந்தது 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். தண்ணீர் குறைவாகக் குடிக்கும்போது, சிறுநீரில் உள்ள தாதுக்கள் படிந்து கற்களாக மாறுகின்றன. இதனைத் தவிர்க்க உணவில் உப்பின் அளவை வெகுவாகக் குறைக்க வேண்டும். அதிகப்படியான உப்பு சிறுநீரகத்தில் கால்சியம் சேருவதைத் தூண்டும். அதேபோல், முட்டைக்கோஸ், தக்காளி மற்றும் கீரை வகைகளை மிதமான அளவில் எடுத்துக் கொள்வது நல்லது, ஏனெனில் இதில் உள்ள 'ஆக்ஸலேட்' கற்களை உருவாக்கும் வாய்ப்புள்ளது.
பழச்சாறுகளில் எலுமிச்சை சாறு மற்றும் இளநீர் சிறுநீரகக் கற்களைக் கரைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. எலுமிச்சையில் உள்ள 'சிட்ரேட்' கால்சியம் படிவதைத் தடுக்கிறது. வாழைத்தண்டு சாறு வாரத்திற்கு ஒருமுறை குடிப்பது சிறுநீரகப் பாதையைச் சுத்தப்படுத்தி, சிறிய கற்களைச் சிறுநீர் வழியாகவே வெளியேற்ற உதவும். அதிகப்படியான அசைவ உணவுகள் மற்றும் பாட்டில் பானங்களைத் தவிர்ப்பது சிறுநீரகத்தின் சுமையைக் குறைக்கும். சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வரும்போது அதனை அடக்காமல் உடனே செல்வது கற்கள் உருவாகாமல் தடுக்க உதவும்.
தினமும் உடற்பயிற்சி செய்வதும், சரியான எடையைப் பராமரிப்பதும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நல்லது. வலியின் தீவிரம் அதிகமாக இருந்தால் சுய மருத்துவம் செய்யாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தால் எளிய உணவு மாற்றங்கள் மூலமே கற்களைக் கரைத்துவிடலாம். சிறுநீரகம் என்பது உங்கள் உடலின் வடிகட்டி; அதனைச் சுத்தமாக வைத்திருப்பது உங்கள் கையில் தான் உள்ளது. அதிகத் தண்ணீர் குடிப்பதே சிறுநீரகத்திற்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய உதவி என்பதை மறக்காதீர்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.