மத்தியப் பிரதேச மாநிலத்தின் மௌகஞ்ச் மாவட்டத்தில் நடந்த ஒரு கோரமான சாலை விபத்து, ஒட்டுமொத்த மாநிலத்தையுமே உலுக்கியுள்ளது. அதிவேகமாகப் பயணம் செய்த மூன்று சகோதரர்கள், ஒரு நொடி கவனக்குறைவால் தங்கள் உயிரைப் பறிகொடுத்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து நடந்தபோது, அவர்களுக்குப் பின்னால் வந்த நண்பர்கள் அதைத் தங்கள் கைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது.
அந்த வீடியோவில், உபலக்ஷ் கோல், அம்ரிஷ் கோல் மற்றும் ஹேம்ராஜ் கோல் ஆகிய மூன்று சகோதரர்களும் ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று நபர்களாக அமர்ந்து அதிவேகமாகச் செல்வது பதிவாகியுள்ளது. அவர்கள் யாருமே தலைக்கவசம் அணியவில்லை. சாலையில் சென்ற வாகனங்களை மிகவும் ஆபத்தான முறையில் முந்திச் செல்ல முயன்றுள்ளனர். இதில் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த ஒரு இளைஞர் கையில் துப்பாக்கி போன்ற ஒரு ஆயுதத்தை வைத்துக்கொண்டு சாகசம் செய்துள்ளார்.
அதிவேகமாகச் சென்ற அவர்கள், முன்னால் சென்ற ஒரு லாரியை இடது பக்கமாக முந்திச் செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாகச் சாலையோரம் செங்கற்கள் ஏற்றப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த ஒரு டிராலி மீது இவர்களது பைக் பயங்கர வேகத்தில் மோதியது. மோதிய வேகத்தில் மூன்று சகோதரர்களும் தூக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், மூன்று பேருமே சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தனர். இவர்களை வீடியோ எடுத்துக்கொண்டு பின்னால் வந்த நண்பர்களும் நிலைதடுமாறி அதே டிராலி மீது மோதிப் பலத்த காயமடைந்தனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்திற்கு மிக முக்கியமான காரணம் 'டிரிபிள் ரைடிங்' எனப்படும் ஒரே பைக்கில் மூன்று பேர் பயணித்ததுதான். மூன்று பேர் அமரும்போது பைக்கைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம், குறிப்பாக அதிவேகமாகச் செல்லும் போது பிரேக் பிடித்தால் பைக் நிலைதடுமாறிவிடும். மேலும், போக்குவரத்து விதிகளை மதிக்காமல் இடது பக்கமாக வாகனங்களை முந்திச் சென்றதும் (Overtaking) இந்த உயிரிழப்பிற்கு முக்கியக் காரணமாகிவிட்டது. எப்போதும் வாகனங்களை வலது பக்கமாக முந்துவதுதான் பாதுகாப்பானது, அப்போதுதான் முன்னால் செல்லும் டிரைவருக்கு நாம் வருவது தெரியும்.
மற்றொரு கவனிக்க வேண்டிய விஷயம், அவர்களிடம் எந்தவிதமான பாதுகாப்பு கவசங்களும் இல்லை. தலைக்கவசம் அணிந்திருந்தால் ஒருவேளை அவர்கள் உயிர்பிழைக்க வாய்ப்பு இருந்திருக்கும். இன்றைய இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வீடியோ போட வேண்டும் என்பதற்காகச் சாலையில் இதுபோன்ற ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவது தற்கொலைக்குச் சமம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த டிராலியும் விபத்திற்கு ஒரு காரணம் என்றாலும், இளைஞர்களின் அஜாக்கிரதைதான் மூன்று உயிர்களைக் குடித்துள்ளது.
இந்தியாவில் மோட்டார் சைக்கிள் கலாச்சாரம் வளர்ந்து வந்தாலும், இது போன்ற வேடிக்கைக்காக உயிரைப் பணையம் வைக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. திறமை என்பது பாதுகாப்பாக ஓட்டுவதில் தான் இருக்கிறது, வேகத்தில் இல்லை என்பதை ஒவ்வொரு வாகன ஓட்டியும் உணர வேண்டும். ஒரு குடும்பத்தின் மூன்று வாரிசுகளை ஒரே நொடியில் காவு வாங்கிய இந்த விபத்து, சாலை விதிகளை மதிக்காத அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை பாடம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.