ஒரு கட்டத்தில் குடும்பக் கட்டுப்பாட்டை ஆதரித்த நிலையிலிருந்து மேலும் விலகி, ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு, தற்போது குழந்தைகள் பிறப்பு சதவீதத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மூன்றாவது குழந்தை பிறக்கும் குடும்பங்களுக்கு ரூ.30 ஆயிரமும், நான்காவது குழந்தைக்கு ரூ.40 ஆயிரமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மக்களவை தொகுதிகள் அதிகரிப்பு மற்றும் மக்கள் தொகை அடிப்படையிலான எதிர்கால அரசியல் மாற்றங்களுடன் இந்த முடிவை எதிர்க்கட்சிகள் தொடர்புபடுத்தி விமர்சனம் செய்து வருகின்றன. தேசிய அளவில் குடும்பக் கட்டுப்பாட்டு கொள்கை ஏன் அமல்படுத்தப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
சனிக்கிழமையன்று ஸ்ரீகாகுளம் மாவட்டம் நர்சன்னபேட்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சந்திரபாபு நாயுடு, “நான் இதைப் பற்றி பலமுறை யோசித்திருக்கிறேன். கடந்த காலத்தில் குடும்பக் கட்டுப்பாட்டிற்காக நான் பணியாற்றினேன். ஆனால் இன்றைய சூழலில் குழந்தைகளே நமது செல்வம். அவர்களுக்காக நாம் அனைவரும் பணியாற்ற வேண்டிய நிலை உருவாகியுள்ளது,” என்றார். மேலும், “அதனால்தான் இந்த புதிய முடிவை எடுத்துள்ளேன். மூன்றாவது குழந்தைக்கு பிறந்த உடனேயே ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். நான்காவது குழந்தைக்கு ரூ.40 ஆயிரம் வழங்கப்படும்,” என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் அறிவித்தார். குறைந்து வரும் பிறப்பு விகிதம் குறித்து கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து கவலை தெரிவித்து வரும் சந்திரபாபு நாயுடு, தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் செய்த தவறுகளை இந்தியா மீண்டும் செய்யக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
“அதிகரித்து வரும் வருமானம் காரணமாக சில தம்பதிகள் ஒரு குழந்தையை மட்டுமே பெற்றெடுக்கிறார்கள். சிலர் முதல் குழந்தை பெண்ணாக இருந்தால் மட்டுமே இரண்டாவது குழந்தையைப் பெறுகின்றனர்,” என்றும் அவர் குறிப்பிட்டார். மாற்று நிலை மொத்த கருவுறுதல் விகிதமான (TFR) 2.1-ஐ பராமரிப்பது அவசியம் என்றும், ஒரு பெண்ணுக்கு சராசரியாக 2.1 குழந்தைகள் என்ற கருவுறுதல் விகிதம் இருந்தால்தான் மக்கள் தொகை நிலையாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமான கார்த்தி சிதம்பரம், இந்த அறிவிப்பு தொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து “உண்மையாகவா?” என்று ஒரே வார்த்தையில் கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் அலோக் ஷர்மா, “கடந்த 12 ஆண்டுகளாக குடும்பக் கட்டுப்பாடு மற்றும் மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து தேசிய அளவில் எந்த விவாதமோ கொள்கையோ இல்லை. தற்போது மக்களவை தொகுதி அதிகரிப்பு பற்றிய பேச்சுகள் நடந்து வரும் நிலையில், தென்னிந்திய மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்தால் எதிர்காலத்தில் தொகுதிகளும் குறையக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது,” என்றார்.
மேலும், “தேசிய அளவில் குடும்பக் கட்டுப்பாடு, குடும்பத் திட்டமிடல் மற்றும் மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து மத்திய அரசு ஏன் எந்த கொள்கையையும் உருவாக்கவில்லை?” என்று பாஜக தலைமையிலான மத்திய அரசிடம் அவர் கேள்வி எழுப்பினார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் கார்த்திக் யெல்லபிரகடா, “ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான அரசின் தோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் அரசியல் முயற்சிதான் இந்த அறிவிப்பு,” என்று குற்றம்சாட்டினார்.
“முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை கூட நிறைவேற்றத் தவறிய முதலமைச்சர் தற்போது நம்பகத்தன்மையற்ற புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். பொருளாதார நிலைத்தன்மை, வேலைவாய்ப்பு, நலத்திட்டங்கள் மற்றும் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்குப் பதிலாக இத்தகைய அறிவிப்புகளை வெளியிடுகிறார்,” என்றும் அவர் விமர்சித்தார். சந்திரபாபு நாயுடுவின் இந்த புதிய அறிவிப்பு தற்போது ஆந்திர அரசியலில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.