Cow birth certificate  Cow birth certificate
இந்தியா

"மாடுகளை வெட்டணுமா? அப்போ பசுவின் பிறப்பு சான்றிதழை காட்டுங்கள்!" பாஜக MLA-வால் புதிதாக எழுந்துள்ள 'சர்சை கருத்து'

மாடுகளைக் கொண்டு செல்பவர்கள் அவை இறைச்சிக்காக வெட்டப்படும் அளவுக்கு வளர்ந்துவிட்டன என்பதை நிரூபிக்க 'பிறப்புச் சான்றிதழ்களை' சமர்ப்பிக்க வேண்டும்.

Vinvizhi Leninton

மேற்கு வங்கத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக MLA ரேகா பத்ரா, சனிக்கிழமையன்று ஹிங்கல்கஞ்சில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்றை இடைமறித்து, மாடுகளைக் கொண்டு செல்பவர்கள் அவை இறைச்சிக்காக வெட்டப்படும் அளவுக்கு வளர்ந்துவிட்டன என்பதை நிரூபிக்க 'பிறப்புச் சான்றிதழ்களை' சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியதால் சர்ச்சை வெடித்துள்ளது.

ஹிங்கல்கஞ்ச் மாவட்டத்தின், லெபுகாலி பகுதியில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு, அத்தொகுதியின் பாஜக MLA-வான ரேகா பத்ரா, கால்நடைகள் ஏற்றிச் சென்ற வாகனத்தை வழிமறித்து நிறுத்தியுள்ளார். அதன்பின்பு, வாகனத்தை நிறுத்திய பிறகு, அவர் மாடுகளை வாகனத்திலிருந்து இறக்கி, சாலையோரத்தில் இருந்த ஒரு மரத்தின் அடியில் அவற்றைக் கட்டி, அவற்றுக்கு வைக்கோலும் தண்ணீரும் ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை குறித்துப் பேசிய ரேகா பத்ரா, சட்டவிரோத கால்நடை வர்த்தகத்திற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்ததாகக் கூறினார்.

அதன் பின்பு, 14 வயதுக்குட்பட்ட கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டக்கூடாது என்று புதிய அரசாங்க வழிகாட்டு நெறிமுறை கூறுவதாக தெரிவித்த நிலையில், “எங்கள் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளபடி, 14 வயதுக்குட்பட்ட பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவதற்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாகப் பசுக்களைக் கொண்டு செல்பவர்கள் யாரேனும் கண்டறியப்பட்டால், நாங்கள் அவர்களைப் பிடித்து, பசுக்களின் பிறப்புச் சான்றிதழ்களைக் காட்டுமாறு கேட்போம். பிறப்புச் சான்றிதழைக் காட்டத் தவறினால், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்திற்கு திரிணாமூல் காங்கிரஸிடமிருந்து உடனடியாக ஒரு அரசியல் எதிர்வினையை வெளிப்பட்டது.

மேலும் , கால்நடைகளுக்கு அப்படிப்பட்ட பிறப்புச் சான்றிதழ்கள் உண்மையில் உள்ளனவா? என்று கேள்வி எழுப்பிய திரிணாமூல் MLA குணால் கோஷ், பாஜக ஆளும் மாநிலத்தில் இருந்து ஓர் உதாரணத்தை அளிக்குமாறு பாஜகவுக்கு சவால் விடுத்தார். "பாஜகவால் அப்படிப்பட்ட பசுவின் பிறப்புச் சான்றிதழைக் காட்ட முடிந்தால், அந்தச் சான்றிதழ்களுக்கு யார் அங்கீகாரம் அளித்துள்ளார்? என்பதை நாம் சரிபார்க்க வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார். இந்தச் சம்பவம் தற்போது மேற்கு வங்கத்தில் பாஜக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் இடையே ஒரு புதிய அரசியல் மோதலைத் தூண்டியுள்ளது. இரு கட்சிகளும் கால்நடை போக்குவரத்து மற்றும் இறைச்சி வெட்டும் விதிமுறைகள் குறித்த சர்ச்சை கருத்துக்களைப் பரிமாறி வருகின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.