இந்தியா

“Expiry Date-யை மாற்றி மீண்டும் பேக்கிங்!” - லேஸ் முதல் லிம்கா வரை.. 75 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

மேகி மசாலா, ஆட்டா நூடுல்ஸ், நார்ட் காளான் சூப், ரசோய் கறி பேஸ்ட்கள், ஹெல்மேன்ஸ் மயோனைஸ் உள்ளிட்ட பொருட்களும்...

Muthu Lakshmi

பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகளை மாற்றி, அவற்றை மீண்டும் பேக்கிங் செய்து ஏற்றுமதிக்கு அனுப்ப முயன்றதாகக் கூறப்படும் மோசடி நடவடிக்கை உணவு பாதுக்காப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நவி மும்பையில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து நடத்திய சோதனையில், சுமார் ரூ.75 லட்சம் மதிப்பிலான உணவுப் பொருட்கள் மற்றும் பேக்கிங் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) மற்றும் நவி மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவுடன் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. துர்பே டிடிசி தொழிற்பேட்டையில் உள்ள சாதனா எண்டர்பிரைசஸ் வளாகத்தில் ஆகஸ்ட் 24 முதல் 29 ஆம் தேதி வரை இந்த தொடர் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோதனையில் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பல்வேறு பிரபல நிறுவனங்களின் பெயர்களில் பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பொருட்களில் அச்சிடப்பட்டிருந்த உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகள் அகற்றப்பட்டு இருந்ததாகவும், சில இடங்களில் அவற்றின் மீது புதிய ஸ்டிக்கர்கள் அச்சிடப்பட்டிருந்ததாகவும் FDA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக இன்க்ஜெட் பிரிண்டர்கள் மற்றும் அவர்களே தயாரித்த ஸ்டிக்கர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. உணவுப் பொருட்களின் விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய அசல் லேபிள்கள் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக புதிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்ததாகவும் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளனர்.

இந்த அதிரடி சோதனையில் கைப்பற்றப்பட்ட உணவு பொருட்களில் நான் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் நாள்தோறும் உட்கொள்ளும் லேஸ், குர்குரே, மேகி, நூர், ரசோய், ஹெல்மேன்ஸ், தம்ஸ் அப், லிம்கா உள்ளிட்ட பிரபலமான பிராண்டுகளின் பெயர்களைக் கொண்ட பிராண்ட் பொருட்களும் இருந்ததாக FDA தெரிவித்துள்ளது. லேஸ் வகைகளில் கிளாசிக் சால்டட், மேஜிக் மசாலா, ஸ்பானிஷ் டாங்கி டொமேட்டோ, சிஸ்லிங் ஹாட், லெமன் சில்லி உள்ளிட்ட தயாரிப்புகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அதேபோல், மசாலா மன்ச், ரெட் சில்லி சட்டாக்கா, நாட்டி டொமேட்டோ, சாலிட் மஸ்தி, கிரீன் சட்னி, ஷெஸ்வான் சட்னி மற்றும் பஃப்கார்ன் யம்மி சீஸ் உள்ளிட்ட குர்குரே தயாரிப்புகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், மேகி மசாலா, ஆட்டா நூடுல்ஸ், நார்ட் காளான் சூப், ரசோய் கறி பேஸ்ட்கள், ஹெல்மேன்ஸ் மயோனைஸ் உள்ளிட்ட பொருட்களும் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளன. தம்ஸ் அப் மற்றும் லிம்கா போன்ற குளிர்பானங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையின், இந்த நடவடிக்கை நவி மும்பையை மட்டும் சார்ந்தது அல்ல என்றும் டெல்லி மற்றும் நொய்டாவைச் சேர்ந்த சில நிறுவனங்களுக்கும் இந்த மோசடி செயலில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சோதனையின்போது 10 Exports நிறுவனங்களுடன் தொடர்புடைய 8,442 அட்டைப் பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.75,21,269 என FDA தெரிவித்துள்ளது. இதுதவிர, லேபிள்கள் இல்லாத உணவு பொருட்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.30,600 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் ஆரம்ப தகவல்களில் ரூ.75 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பிலான 4,142 அட்டைப் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் வெளியிடப்பட்ட தகவலின்படி மொத்தம் 8,442 அட்டைப் பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக FDA தெரிவித்துள்ளது.

Expiry தேதிகளை மாற்றி உணவுப் பொருட்களை மீண்டும் சந்தைக்கு அல்லது ஏற்றுமதிக்கு அனுப்பும் முயற்சி நடைபெற்றதா? என்பது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான ஆவணங்கள், ஏற்றுமதி நிறுவனங்களின் தொடர்பு மற்றும் பேக்கிங் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.