இந்தியா

இசை உலகை சோகத்தில் ஆழ்த்திய 'ஆஷா போஸ்லே' மறைவு! - நாளை இறுதி அஞ்சலி

'கிராமி விருது'க்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையை பெற்ற ஆஷா போஸ்லே இன்று காலமானார்.

Vinvizhi Leninton

புகழ்பெற்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே, ஞாயிற்றுக்கிழமை (12ம் தேதி) மும்பையில் தனது 92வது வயதில் காலமானார். 'ப்ரீச் கேண்டி' மருத்துவமனையின் மருத்துவர் பிரதீத் சம்டானி, அவரின் மறைவை உறுதிப்படுத்தினார். இதயம் மற்றும் சுவாசக் கோளாறுகளால் பல உறுப்புகள் செயலிழந்த நிலையில், போஸ்லே சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) கண்காணிக்கப்பட்டு வந்தார். அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இன்று மதியம் 12 மணியளவில் உறுப்புகள் செயலிழந்ததால் அவர் உயிரிழந்தார்," என்று மருத்துவர் சம்டானி கூறினார். இறுதிச் சடங்குகள் நாளை மாலை 4.00 மணிக்கு சிவாஜி பூங்காவில் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

செப்டம்பர் 8, 1933 இல் சாங்லியில் பிறந்த ஆஷா போஸ்லே, பண்டிட் தீனாநாத் மங்கேஷ்கரின் மூன்றாவது மகளாகப் பிறந்தார். அவர் தனது முதல் பாடலான 'சலா சலா நவ் பாலா'வை 1943ல் 'மஜா பால்' திரைப்படத்திற்காக 10 வயதில் பாடினார். இந்தியத் திரையுலகின் மிகவும் வெற்றிகரமான, பிரபலமான மற்றும் அதிகப் பாடல்களைப் பாடிய பாடகிகளில் ஒருவர் ஆஷா போஸ்லே. அவரது மூத்த சகோதரிதான் மறைந்த லதா மங்கேஷ்கர். 1933ல் இசைக் குடும்பமான மங்கேஷ்கர் குடும்பத்தில் பிறந்தார். அவர் தனது முதல் திரைப்படப் பாடலை 1943ல் பதிவுசெய்தார், மேலும் 1950களுக்குள் பாலிவுட்டில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார். அடுத்த மூன்று தசாப்தங்களில், அவர் பெரும்பாலான இசையமைப்பாளர்களால் மிகவும் விரும்பப்படும் கலைஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை:

16 வயதில், தன் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக ஆஷா 31 வயதான கண்பத்ராவ் போஸ்லேவை வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டார். கண்பத்ராவ் ஆஷாவின் தனிப்பட்ட செயலாளராக இருந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன. தனது மாமியார் வீட்டார் தன்னைத் துன்புறுத்தியதாகக் கூறப்பட்டதால், ஆஷா அந்தத் திருமணத்தை முறித்துக்கொண்டார்.1960ல் அவர்கள் இருவரும் பிரிந்தனர்.

1980ல், நீண்டகாலக் காதலுக்குப் பிறகு, தன்னை விட ஆறு வயது இளையவரான இசையமைப்பாளர் ராகுல் தேவ் பர்மனை அவர் திருமணம் செய்துகொண்டார். ராகுல், புகழ்பெற்ற இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மனின் மகன் ஆவார். இந்தத் திருமணத்திற்கு பர்மன் குடும்பத்தினரிடமிருந்தும், குறிப்பாக அவரின் தாயாரிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் 1994ல் காலமானார்.

இசை பயணம்:

ஆரம்பத்தில், ஆஷா, 'கேபரே பாடல்கள்' என்று அழைக்கப்படும் நடனப் பாடல்களை மட்டுமே பாடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால் ஆஷா, 'உம்ராவ் ஜான்' திரைப்படத்தில் அற்புதமாகப் பாடி, தனது திறமையை விரிவுபடுத்தினார். அவர் ஏழு முறை 'ஃபிலிம்ஃபேர் சிறந்த பெண் பின்னணிப் பாடகர்' விருதையும், 'உம்ராவ் ஜான்' திரைப்படத்தின் 'தில் சீஸ் க்யா ஹை' மற்றும் 'இஜாசத்' திரைப்படத்தின் 'மேரா குச் சாமான்' ஆகிய பாடல்களுக்காக இரண்டு முறை தேசிய திரைப்பட விருதையும் வென்றுள்ளார்.

1997ல், கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியப் பாடகி என்ற பெருமையை அவர் பெற்றார். 2001ல் அவருக்கு 'தாதாசாகேப் பால்கே விருது' வழங்கப்பட்டது. 2011ம் ஆண்டில், 'கின்னஸ் உலக சாதனைகள்', ஆஷா போஸ்லேவை இசை வரலாற்றில் அதிகப் பாடல்களைப் பதிவு செய்த கலைஞராக அங்கீகரித்தது. அவர் பல மொழிகளில் தனிப்பாடல்கள், இரட்டைப் பாடல்கள் மற்றும் குழுப் பாடல்கள் உட்பட 12,000 பாடல்களைப் பதிவு செய்துள்ளார். தனது திறமையின் வெவ்வேறு பரிமாணங்களில் பரிசோதனை செய்வதை அவர் விடவேயில்லை. 2002ல், ஆஷா 'ஆப் கி ஆஷா' என்ற ஒரு அசல் ஆல்பத்திற்கு இசையமைத்தார்.

இசை மட்டுமின்றி, தனது 79 வயதில் 2013ல் வெளியான 'மை' திரைப்படத்தில் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு தாயாக நடித்து நடிகையாக அறிமுகமானார். இது அவரது கலைத்திறனின் பன்முகத்தன்மைக்கு மற்றுமொரு சான்றாகும்.

தமிழில் இவரது குரல்கள் ரசிகர்கள் மத்தியில் அவரது குரல், ஒரு வருடும் தென்றலை போல தொட்டு சென்றது எனலாம். குறிப்பாக, எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தின் 'செண்பகமே' பாடல், ஹே ராம் திரைப்படத்தில் இளையராஜா இசையில் 'நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி' பாடல், சந்திரமுகி திரைப்படத்தில் 'கொஞ்சம் நேரம்' பாடல், மணிரத்னம் இயக்கத்தில், எ.ஆர். ரஹ்மான் இசையில் வந்த 'செப்டம்பர் மாதம்' பாடல், சேதுபதி ஐ.பி.எஸ் திரைப்படத்தின் 'சாத்து நட சாத்து' , இருவர் திரைப்படத்தில் 'வெண்ணிலா வெண்ணிலா' பாடல் போன்ற பல மனதை மயக்கும் பல பாடல்களை பாடியுள்ளார்.

போஸ்லேவின் மொழிப் பன்முகத்தன்மை, மராத்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் பாடல்களைப் பதிவு செய்ய அவரைத் தூண்டியது. மேலும், இவருக்கு, தாதாசாகேப் பால்கே விருது விருது மட்டுமின்றி பத்ம விபூஷன் ஆகிய விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.