உத்தரகாண்ட் மாநிலத்தின் அல்மோரா மாவட்டம் கடந்த சில வாரங்களாக மர்மமான முறையில் மக்கள் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. . மாவட்டத்தின் தௌலா தேவி தொகுதியில் சுமார் 20 நாட்களில் மட்டும் ஏழு பேர் மர்மமான முறையில் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. இதனால் உள்ளூர் மக்கள்பீதியில் உறைந்து போயுள்ளனர். சுகாதாரத் துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
திடீரென ஏற்பட்ட இந்த உயிரிழப்புகள், ஏதேனும் ஒரு வைரஸ் தொற்று காரணமாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தையும் அதிகாரிகள் கிளப்பியுள்ளனர். மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் நவீன் சந்திர திவாரி இதுகுறித்து பேசுகையில், “இறந்தவர்களில் இரண்டு பேர் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும், மீதமுள்ள ஐந்து பேரின் மரணம் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துள்ளது” என்றும் தெரிவித்தார்.
மேலும், சுகாதாரத் துறை 11 பேரின் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளது, அதில் மூன்று மாதிரிகள் டைபாய்டு காய்ச்சலை உறுதிப்படுத்தியுள்ளன. டாக்டர் திவாரி மேலும் கூறும்போது, “தண்ணீர் மாதிரிகளில் கோலிஃபார்ம் பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டது. அதே சமயம், இரத்த மாதிரிகளும் டைபாய்டு தொற்றை உறுதிப்படுத்தின. இதனால் நீர் மாசுபாடு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்” என்றார்.
அதிகாரிகள் உடனடியாக குடிநீர் விநியோகம் குறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும், அனைத்து தண்ணீர் தொட்டிகளையும் உடனடியாக சுத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும்கூறியுள்ளனர். மேலும், கிராமவாசிகள் கொதிக்க வைத்த சுகாதாரமான நீரையே குடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டதாக கூரப்படுகிறது.
அதிகரித்து வரும் நோய்த்தொற்று கவலைக்கிடமான விஷயமாக மாறியுள்ளது.
ஆஷா பணியாளர்கள், சமூக சுகாதார அலுவலர்கள் (CHO), மருந்தாளர்கள் ஆகியோர் அடங்கிய 16 மருத்துவ குழுவை அம்மாநில சுகாதாரத்துறை அனுப்பி வைத்துள்ளது.
அவர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு, சுகாதார பரிசோதனை மற்றும் சுகாதார கல்வி விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுகாதார அதிகாரிகள், இந்தப் பகுதியில் இதுவரை காணப்படாத ஒரு புதிய வகை வைரஸ் தொற்று இருக்கக்கூடும் என்று கூறியுள்ளனர். “குமாவோன் பகுதியில் இவ்வகை வைரஸ் தொற்று பதிவாகி இருப்பது இதுவே முதல் முறை” என்றும்கூறியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.