Bihar ATM salon Bihar ATM salon
இந்தியா

"அடடே இது புதுசா இருக்கே.."சலூனாக மாறிய ATM! இணையத்தில் வைரலாகும் 'SBI ATM'

வெளியில் எஸ்பிஐ ஏடிஎம் பலகை இருந்தபடியே உள்ள நிலையில், உள்ளே முடிதிருத்துபவர் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவது காணப்படுகிறது.

Vinvizhi Leninton

பீகாரின் பாட்னா அருகே உள்ள தானாபூர் பகுதியில் அமைந்திருந்த எஸ்பிஐ ஏடிஎம் மையம் ஒன்று தற்போது முடிதிருத்தும் நிலையமாக மாற்றப்பட்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏடிஎம் இயந்திரம் அகற்றப்பட்ட பின்னரும், வெளிப்புறத்தில் இருந்த எஸ்பிஐ ஏடிஎம் பெயர்பலகை மாற்றப்படாமல் இருந்ததால், இந்த இடம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த மையத்திற்குள் பணம் எடுக்க வருவோர், உள்ளே சென்றபின் முடி வெட்டும் நாற்காலிகள், கண்ணாடிகள் மற்றும் சவர உபகரணங்கள் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அந்த இடத்தை நகைச்சுவையாக “முடி வெட்டும் ஏடிஎம்” என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர். சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொளிகளில், வெளியில் எஸ்பிஐ ஏடிஎம் பலகை இருந்தபடியே உள்ள நிலையில், உள்ளே முடிதிருத்துபவர் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவது காணப்படுகிறது. இந்த விசித்திரமான அமைப்பைப் பார்க்க பலர் நேரில் சென்று புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்து வருகின்றனர்.

உள்ளூர் மக்களின் தகவலின்படி, அந்த ஏடிஎம் முன்பு செயல்பாட்டில் இருந்ததாகவும், பின்னர் இயந்திரம் அகற்றப்பட்டதையடுத்து அந்த இடம் வாடகைக்கு விடப்பட்டு சலூனாக மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ஏடிஎம் சின்னம் மற்றும் வெளிப்புற அமைப்பு மாற்றப்படாமல் இருந்ததால், வெளியூரிலிருந்து வருபவர்கள் குழப்பமடைவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏடிஎம் மையம் மூடப்பட்ட பிறகும் வங்கியின் பெயர்பலகை அகற்றப்படாதது குறித்து சிலர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், மற்றவர்கள் இதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.