இந்தியா

க்ளாஸ்ரூமுக்கு குடித்து விட்டு போதையில் வந்த ஆசிரியையால் பரபரப்பு!!!

வகுப்பறைக்கு, மது போதையில் வந்த் ஆசிரியை மீது பெற்றோர் புகாரளித்ததையடுத்து, பள்ளியில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.

Malaimurasu Seithigal TV

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள சிக்கசாரங்கி தொடக்கப்பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியை கங்கலக்ஷம்மா பணியாற்றி வருகிறார். ஆனால் கடந்த 5 ஆண்டு காலமாக இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மேலும், பாடம் நடத்தும் போது மது அருந்தி, மாணவர்களை அடிப்பது, சக ஊழியர்களிடம் சண்டை போடுவது போன்றவற்றை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மாணவர்களின் கல்வி தடைபட்டுள்ளது. இதை உணர்ந்த பெற்றோர், அவரது தவறை திருத்தும்படி ஆசிரியை கங்கலக்ஷம்மாவை எச்சரித்துள்ளனர். ஆனால் அவர் மனம் மாறியதாக தெரியவில்லை. இதனால் பள்ளிக்கு பூட்டு போட்டு அந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பிஇஓ ஹனுமா நாயக் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஆசிரியர் மேஜையின் டிராயரை திறக்க கிராம மக்கள் வலியுறுத்தினர்.

பிஇஓ ஹனுமா நாயக் ஆசிரியையின் டிராயரை திறக்கச் சென்றபோது, அதை ஆசிரியை கங்களாக்ஷம்மா எதிர்த்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மேஜையை வலுகட்டாயமாக வெளியே கொண்டு வந்து டிராயரின் பூட்டை உடைத்தனர். அப்போது டிராயரில் ஒரு முழு ஃபுல் பிராந்தி பாட்டிலும், மேலும் இரண்டு காலி மதுபாட்டில்களும் கிடைத்துள்ளது.

இதனைப் பார்த்த பள்ளிக்கல்வி அலுவலர், ஆசிரியை கங்களாக்ஷம்மா மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி குழந்தைகளின் பெற்றோரிடம் வாக்குறுதி அளித்தார். அதன் பின்னர் பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து கலைந்து சென்றனர். ஆசிரியையின் டிராயரில் இருந்து மதுபாட்டில்களை பொதுமக்கள் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.