இந்தியா

மீனவர்களைச் சுடும் இந்தியக் கடற்படை...கடிதம் எழுதினாராம் தமிழிசை!

தமிழ்நாட்டு மீனவர்கள் சென்ற படகின் மீது இந்தியக் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது.

Malaimurasu Seithigal TV

தீபாவளி பண்டிகை இன்னும் இரண்டு தினங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் புதுச்சேரி தவளக்குப்பம் பகுதிகளில் உள்ள பட்டாசு தயாரிக்கும் இடங்களில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் சபாநாயகர் செல்வம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஆய்வு

முறையான அனுமதி பெற்று பட்டாசு தயாரிக்கப்படுகிறதா, பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை தயாரிக்கிறார்களா, பட்டாசு மருந்துகள் முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்று ஆய்வு செய்தார்கள். அங்கு பணியில் இருந்த பட்டாசுத்  தொழிலாளர்களுக்கு இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தனர்.   

தீக்காய சிகிச்சைப் பிரிவு

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், பொதுமக்கள் பாதுகாப்போடு தீபாவளியை கொண்டாட வேண்டும் எனவும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சிறப்பு தீக்காய சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் ஆளுநர் தமிழிசை.

மீனவர் மீது துப்பாக்கிச் சூடு

தமிழ்நாடு மற்றும் காரைக்கால் மீனவர்கள் சென்ற படகின் மீது இந்தியக் கடற்படை  துப்பாக்கிச் சூடு நடத்தியது. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,  இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும், எப்போதெல்லாம் நாம் கோரிக்கை வைக்கிறோமோ அப்போதெல்லாம் ஒன்றிய அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவர்களுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் மத்திய அரசும், புதுச்சேரி அரசும் உடனிருக்கும் என தெரிவித்தார். 

மீனவர்களைத் தாக்குகிறதா அரசு?

தற்போது நடந்தது போலவே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிர்வாகத்தில் வாழும் மீனவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல் தொடுக்கும் சம்பவங்கள் அவ்வப்போது  நடந்து வருகிறது. இதனைப் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கண்டித்து வருகின்றனர்.