இந்தியா

பிரஷாந்த் கிஷோர் கட்சியே இவ்ளோ அடி வாங்குதே.. அப்போ நம்ம நிலைமை!? - பீகார் தேர்தல் முடிவுகளால் வெலவெலத்து போயுள்ள விஜய்!

குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் மிக முக்கியப் பொறுப்பாளர் ஆதவ் அர்ஜுனா, பிரஷாந்த் கிஷோரை விஜய்யின்...

மாலை முரசு செய்தி குழு

இந்திய அரசியலின் வெற்றி ரகசியங்களை எழுதி வந்த மிக முக்கிய வியூகம் வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர், இப்போது தன் சொந்தக் கட்சிக்காகப் பீகார் சட்டமன்ற தேர்தலில் சந்தித்திருக்கும் பெரும் தோல்வி, இங்கே தமிழ்நாட்டில் விஜய்யை சற்றே அசைத்துப் பார்த்திருக்கிறது. தேர்தல் வியூகம் அமைப்பதில் அவருக்கு நிகர் அவரே என்று புகழப்பட்டவர், தன் அரசியல் பயணத்தின் முதல் அடியிலேயே பெரும் சறுக்கலைச் சந்தித்திருப்பது, தமிழ்நாட்டின் புதிய அரசியல் பயணத்திற்குப் புறப்பட்டு இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருக்கு ஒரு மிகப் பெரிய எச்சரிக்கை மணியாக ஒலித்துள்ளது.

லைட்டாக, பிரஷாந்த் கிஷோரின் கடந்த காலங்களை இங்கே பார்ப்போம். 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடியின் வெற்றி, 2015இல் நிதிஷ் குமார் வெற்றி, 2019இல் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆந்திர வெற்றி, 2021இல் மம்தா பானர்ஜியின் மேற்கு வங்க வெற்றி என, இவரின் வெற்றிக் கணக்கு நீளமானது. ஆனால், அவர் அரசியல் களத்தில் இறங்கி, ஜன் சுராஜ் என்ற மாற்று அரசியல் சக்தியை உருவாக்க வேண்டும் என்று இரண்டு வருடங்களாக பாத யாத்திரை மேற்கொண்டார். ஆனால், இவரின் கட்சிக்கு வாக்காளர்கள் மத்தியில் இந்த நடைபயணத்துக்கு எந்த ஒரு வரவேற்பும் கிடைக்கவில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் திட்டவட்டமாகக் காட்டுகின்றன. இரண்டு பெரும் வட்டாரக் கட்சிகளான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணிக்கு எதிராக ஒரு புதிய சக்தியை உருவாக்க நினைத்த அவரின் முயற்சி, தேர்தல் ஆணையத்தின் பதிவுப் புத்தகத்தில் ஒரு புள்ளி போலக்கூடப் பதியவில்லை.

இந்த சூழலில் விஜய்யின் தவெக கட்சியின் நிகழ்வுக்கு பிரஷாந்த் கிஷோரை அழைத்து வந்தார் ஆதவ் அர்ஜுனா. அதுமட்டுமின்றி, பிரஷாந்த் கிஷோரை பிரஷாந்த் கிஷோரின் வியூகக் குழுதான் புதிய கட்சியின் ஆரம்பகட்டத் திட்டமிடலுக்கு உதவியது என்றும் கூறப்படுகிறது. ஆனால், தற்போது பீகாரில் பிரஷாந்த் கிஷோர் கட்சி சந்தித்துள்ள தோல்வி பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. பல வெற்றிகரமான தேர்தல் பயணங்களுக்குப் பின்னால் இருந்த ஒரு வியூகம் வகுப்பாளர், தானே ஒரு அரசியல் களத்தில் இறங்கி, தனது அத்தனை தந்திரங்களையும் பயன்படுத்திப் பார்த்தும், மக்கள் ஒரு இடம்கூடக் கொடுக்காதது என்பது, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஓர் இமாலயப் பாடமாகும். காரணம், தமிழ்நாட்டின் அரசியல் சூழலும், பீகாரின் அரசியல் சூழலும் முற்றிலும் வேறுபட்டவை என்றாலும், அங்கே பிரஷாந்த் கிஷோருக்கு இருந்த அரசியல் அறிவு மற்றும் மக்களின் பரிச்சயம், இங்குத் தமிழக வெற்றிக் கழகத்திற்குக் கிடைக்காது. இங்கு விஜய் என்ற ஒரு சினிமா முகமும், அதைச் சுற்றிப் பின்னப்பட்ட ரசிகர் கூட்டமும் மட்டுமே உள்ளன.

பிரஷாந்த் கிஷோர் தன் தோல்வியின் மூலம் விஜய்க்கு உணர்த்தும் பாடம் இதுதான்: ஒரு மாநிலத்தின் அரசியல் வேர்களைப் பிடுங்கவும், இரண்டு பெரும் வட்டாரக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைக்கவும், வெறும் பாத யாத்திரையும், சமூக ஊடகப் பரபரப்பும் மட்டும் போதாது. பீகாரில், நூறு ஆண்டுகளுக்கும் மேலான சாதி அரசியல் பிணைப்புகளும், நிதீஷ் குமாரின் சமூக வாக்கு வங்கித் திட்டங்களும், பிரதமர் மோடியின் தாக்கம் கொண்ட தேசியவாதமும் இணைந்து, புதிய சக்திகளை எளிதில் முறியடித்தன. இதேபோன்றதொரு சவால், தமிழ்நாட்டில் திராவிட அரசியல் சித்தாந்தம், பலமான வாக்கு இயந்திரங்கள் மற்றும் இலவசத் திட்டங்கள் என்ற ஆயுதங்களுடன் தவெக-வை எதிர்கொள்ள காத்திருக்கின்றன.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், 2026ஆம் ஆண்டுச் சட்டமன்றத் தேர்தலில் ஒரு மாற்றுச் சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்றால், இப்போது பிரஷாந்த் கிஷோரின் தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது, வெறும் 'Branding'-ஐ மட்டும் வைத்துக் கொண்டு இங்கே வெற்றிப் பெற முடியாது என்பதே. எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும், எதிர்க்கட்சிகளை குறை சொல்வதை மட்டும் வாடிக்கையாக வைத்திருப்பது அரசியலுக்கு சரி வராது. 'அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை.. அவர்கள் நாங்கள் சொல்வதை கேட்பதில்லை.. திமுக தான் இதற்கு காரணம், முதல்வர் ஸ்டாலின் தான் இதற்கு காரணம்' என்று அனைத்திற்கும் மற்றவர்கள் மீது பழிபோட்டுவிட்டு தப்பிக்க நினைத்தால், மக்கள் நம்மை நம்ப மாட்டார்கள் என்பதை அக்கட்சியின் நிர்வாகிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.