ட்விஷா சர்மா மர்ம மரணம் தொடர்பான விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) தீவிரப்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கைதாகியுள்ள துவிஷாவின் கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரிபாலா சிங் ஆகியோரை, அவர்கள் வீட்டிற்கே அழைத்துச் சென்று, துவிஷாவின் உடல் தூக்கிலிருந்து எப்படி கீழே இறக்கப்பட்டது என்பதை மீண்டும் நடித்துக்காட்ட சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மே 12-ம் தேதி இரவு ட்விஷா தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமர்த் சிங் மற்றும் அவரது தாயார் கிரிபாலா சிங் கூறிய வாக்குமூலங்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்க, சிபிஐ அதிகாரிகள் 80 கிலோ எடை கொண்ட ஒரு மாதிரிக் பொம்மையை பயன்படுத்த உள்ளனர். கணவர் சமர்த் சிங், ட்விஷாவின் உடலை எப்படித் தூக்கிலிருந்து கீழே இறக்கினார் என்பதையும், மாமியார் கிரிபாலா சிங் கழுத்தில் இருந்த முடிச்சை எப்படி அவிழ்த்தார் என்பதையும் அந்த பொம்மையை வைத்து அவர்கள் தத்ரூபமாக நடித்துக் காட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சோதனையின் மூலம், அவர்கள் கூறிய தகவல்களும் குற்றச்சம்பவம் நடந்த இடமும் ஒத்துப்போகிறதா என்று ஆய்வாளர்கள் சோதிப்பார்கள்.
இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக கருதப்படும் பெல்ட், எவ்வளவு எடையைத் தாங்கும் திறன் கொண்டது என்பதையும் அதிகாரிகள் பரிசோதிக்க உள்ளனர். ட்விஷா தன்னைத்தானே தூக்கிலிட பெல்ட்டைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் நிலையில், இந்த சோதனை மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் கிரிபாலா சிங்கின் முன்ஜாமீனை ரத்து செய்ததையடுத்து, கடந்த வியாழக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார். தற்போது சமர்த் சிங் மற்றும் கிரிபாலா சிங் ஆகிய இருவரும் ஜூன் 2-ம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ட்விஷாவின் கர்ப்பம் மற்றும் அவரது உடலில் இருந்த காயங்கள் குறித்து கிரிபாலா சிங்கிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போபால் காட்டாரா ஹில்ஸில் உள்ள வீட்டில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, ட்விஷாவின் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு புகார்களை முன்வைத்திருந்தனர். டெல்லியில் இருந்து வந்த சிறப்பு தடயவியல் குழுவினரின் உதவியுடன், ஏற்கனவே அந்த வீட்டில் சிபிஐ அதிகாரிகள் புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் முக்கிய ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர். தற்போது இருவரையும் தனித்தனியாகவும், நேருக்கு நேர் வைத்தும் விசாரிப்பதன் மூலம் உண்மையை வெளிக்கொண்டுவர சிபிஐ முனைப்பு காட்டி வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்