இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறிய சில கருத்துகள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கின் விசாரணையின் போது, “youngsters like cockroaches” என்று அவர் குறிப்பிட்டது கவனத்தை ஈர்த்துள்ளது.
மூத்த வழக்கறிஞர் நியமனம் தொடர்பான மனுவை விசாரித்தபோது, சமூக ஊடகங்களில் சிலர் நீதித்துறை மற்றும் அரசாங்க அமைப்புகளை தொடர்ந்து தாக்கி வருவதாக அவர் குற்றம்சாட்டினார். “சில இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. எந்தத் தொழிலிலும் நிலைத்து நிற்க முடியவில்லை. அதனால் அவர்கள் சமூக ஊடகங்கள், தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் போன்ற துறைகளுக்கு சென்று, பின்னர் எல்லோரையும் விமர்சிக்கத் தொடங்குகிறார்கள்,” என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறினார்.
மேலும், டெல்லியைச் சேர்ந்த சில வழக்கறிஞர்களின் சட்டப் பட்டங்கள் குறித்து தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். “சிலரின் சட்டப் பட்டங்கள் உண்மையா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. தேவையானால் சிபிஐ விசாரணையும் நடத்தலாம்,” என்றும் கூறினார். இதனுடன், “கருப்பு அங்கி அணிந்த ஆயிரக்கணக்கான மோசடி நபர்கள் இருக்கிறார்கள்” என்றும் அவர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் மனுதாரரின் வழக்கறிஞர் சமூக ஊடகங்களில் பயன்படுத்திய மொழியையும் தலைமை நீதிபதி விமர்சித்தார். “சமூக ஊடகங்களில் பயன்படுத்தப்படும் மொழி தொழில்முறை ஒழுக்கத்திற்கு எதிரானது,” என்று அவர் எச்சரித்தார். இறுதியில், அந்த மனுவை மனுதாரர் திரும்பப் பெற்றுக்கொண்டார். ஆனால் தலைமை நீதிபதி சூர்யகாந்தின் இந்த கருத்துகள் தற்போது சமூக ஊடகங்கள் மற்றும் சட்டத்துறையில் பெரிய விவாதமாக மாறியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.