தமிழ்நாடு

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தது ஒரு விபத்து - காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு!

Tamil Selvi Selvakumar

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தது ஒரு விபத்து என்றும், அது எல்லா மாநிலங்களிலும் நடக்காது எனவும், காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி பிறந்தநாள்: 

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது உருவ சிலைக்கு, தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில், திருநாவுக்கரசு எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருநாவுக்கரசு பேட்டி:

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், யார் எதிர்க்கட்சியாக வரவேண்டும் என்பதை நிர்ணயித்து பிரச்சாரம் நடத்துவது, சர்வாதிகாரப் போக்கு என சாடியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்துக்கு எப்போது வந்தாலும் மக்கள் வெள்ளத்தில் நீந்தி செல்வார் என்றும், அதுபோல இந்த முறையும் ராகுல் காந்தியின் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் பயணம் வெற்றிகரமாக முடியும் எனவும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தது ஒரு விபத்து என்றும், அது எல்லா மாநிலங்களிலும் நடக்காது எனவும் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

உருவபொம்மை எரிப்பு:

இதனிடையே மதுபான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக, டெல்லி துணை முதல்வர் சிசோடியா மீது சிபிஐ வழக்கு பதிந்துள்ள நிலையில், சிசோடியா பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அவரது உருவபொம்மையும் தீவைத்து எரிக்கப்பட்டது.