தமிழ்நாடு

விஜய் ஒருவரே சரி..! “திரைத்துறையை ராஜ்மோகனுக்கு ஒதுக்கியது வருத்தமளிக்கிறது” - நடிகர் விஷால் ஓபன் டாக்!

இந்தத் துறையில் அனுபவம் குறைவாகவோ அல்லது அனுபவமே இல்லாதவரிடம்

Muthu Lakshmi

தமிழக 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெரும்பான்மை தொகுதிகளோடு ஆட்சி அமைத்துள்ளது. அதையடுத்து புதிய அமைச்சரவை தொடர்பான இலாகா ஒதுக்கீட்டு பட்டியலை ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதன்படி, தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள தவெக தலைவர் ஜோசப் விஜய், காவல்துறை, பொதுநிர்வாகம் மற்றும் உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை கண்காணிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்மோகன்-க்கு பள்ளிக் கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் திரைப்பட தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது நடிகர் விஷால் ராஜ்மோகனுக்கு திரைப்படத்துறைகான அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சகங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதை வரவேற்பதாகவும், ஆனால் திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவுச் சட்டத்துறை அமைச்சராக ராஜ்மோகன் நியமிக்கப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், முதல்வர் விஜய் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பொறுப்புகளை ஒதுக்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் மதிப்பிற்குரிய அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கு திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் சினிமாடோகிராபி சட்டத்துறை வழங்கப்பட்டிருப்பது மனவேதனை அளிக்கிறது. நேற்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் “பல நிதி நெருக்கடிகளும் சீர்திருத்தத் தேவைகளும் உள்ள திரைப்படத் துறையின் பிரச்சினைகளை, கடந்த 30 ஆண்டுகளாக அந்தத் துறையின் ஒரு பகுதியாக இருந்து வரும் ஜோசப் விஜய் போன்ற ஒருவரே முழுமையாக புரிந்துகொள்ள முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து “இந்தத் துறையில் அனுபவம் குறைவாகவோ அல்லது அனுபவமே இல்லாதவரிடம் எவ்வாறு எடுத்துச் செல்ல முடியும்? என்றும் அமைச்சர் ராஜ்மோகன் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

திரைப்படத் துறைக்காக முதலமைச்சர் கவனிக்க வேண்டிய முக்கிய கோரிக்கைகளையும் விஷால் முன்வைத்துள்ளார். அரசு சார்பிலான டிக்கெட் வழங்கும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும். இதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன், ரசிகர்களுக்கும் டிக்கெட் கட்டணத்தில் நிவாரணம் கிடைக்கும். “ஒரே இந்தியா, ஒரே வரி” கொள்கைக்கு முரணாக உள்ளாட்சி கேளிக்கை வரி விதிக்கப்படுவதாக கூறி, அந்த வரியை ரத்து செய்ய வேண்டும். சிறிய திரைப்படங்களுக்கு வழங்கப்படும் மானியத் தொகையை அதிகரிக்க வேண்டும், என்பது போன்ற கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் இந்தக் கோரிக்கைகள் கடந்த 9 ஆண்டுகளாக தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருவதாகவும், திரு. ராஜ்மோகன் அவர்களை குறைத்து மதிப்பிடும் நோக்கம் எதுவும் இல்லை; இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே. எங்கள் திரைப்படத் துறைக்கு தேவையான நிவாரணத்தையும் நம்பிக்கையையும் வழங்க முடிவது மாண்புமிகு முதல்வர் அவர்களாலேயே சாத்தியம்” என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.