தமிழ்நாடு

"பாஜக ஆட்சியில், தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடக்கவில்லை" அண்ணாமலை பெருமிதம்!! 

Malaimurasu Seithigal TV

என் மண் என் மக்கள் நடைப்பயணத்தின் பொழுது, மக்களாட்சியிலிருந்து முடியாட்சிக்கு மாறுவதுதான் திமுக நடத்தும் திராவிட மாடல் ஆட்சி என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ள அண்ணாமலை, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பொதுமக்களிடையே பேசியுள்ளார். அப்பொழுது, பேசிய அவர், "மக்கள் ஆட்சியில் இருந்து முடி  ஆட்சிக்கு மாறுவதுதான் திமுக நடத்தும் திராவிட மாடல் ஆட்சி", எனச் சாடியுள்ளார்.

மேலும், "கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 10 ஆண்டுகளில் 85 மீனவர்கள் ஆழ்கடலில் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆனால்,  கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் துப்பாக்கி சூடு சம்பவமே நடக்கவில்லை" எனவும் கூறியுள்ளார்.

மேலும்" கடலில் இந்தியா, இலங்கை எல்லை எந்த இடத்தில் இருக்கிறது என்று நம் மீனவர்களுக்கு தெரியாமல் மாட்டிக் கொள்கிறார்கள். எனவே, கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும் என்று மத்திய அரசை தமிழக பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வைத்தது. அது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், இலங்கையில் சிறை பிடிக்கப்பட்டுள்ள படகுகளை மீட்கவும் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றும் கூறியுள்ளார்.

மேலும்,"அதேபோன்று மீன்பிடி தடைகால நிவாரணத்தை ரூ.8,000-மாக உயர்த்தித் தருவதாக கூறியது. அதையும் செய்யாமல் மீனவர்களை தொடர்ந்து திமுக அரசு ஏமாற்றி வருகிறது" என்றும் பேசியுள்ளார்.