அதிமுகவில் தொடர்ந்து உட்கட்சி பூசல் நிலவி வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செப் -5 மனம் திறப்பதாக கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று தனது வீட்டில் இருந்து ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் ஊர்வலமாக சென்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் “ஏழை எளிய மக்களுக்காக, மாணவர்களுக்காக, உழைப்பாளர்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி தான் அதிமுக, அம்மாவின் மறைவிற்கு பிறகு அனைவரும் ஒருமனதாக சசிகலா அவர்களை தேர்ந்தெடுத்தோம். மீண்டும் ஒரு சூழ்நிலையில் முதலமைச்சர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தது, இரண்டு முறை எனக்கு வாய்ப்பு இருந்தும் கட்சியின் ஒற்றுமைக்காக நான் எனது நிலைப்பாட்டில் இருந்து கட்சிக்காக பணியாற்றி வந்தேன். 2017 க்கு பிறகு வந்த தேர்தலில் களத்தில் சில பிரச்சனைகளை நாம் சந்தித்தோம், இந்த நிலையில் கட்சியின் பொதுச் செயலாளரை சந்தித்து கட்சியில் இருந்து வெளியே சென்றவர்களை கட்சியுடன் இணைக்க வேண்டும் என்ற கருத்தை குறிப்பிட்டிருந்தோம் அதனை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
கட்சியை விட்டு வெளியேறியவர்களை எல்லாம் கட்சியில் இணைத்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும். வெற்றிவாகை சூட வேண்டும் என்றால் கட்சியை விட்டு வெளியில் சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும். கட்சியை விட்டு வெளியில் சென்றவர்களும் அவர்களின் கருத்துக்கள் மூலமும் கடிதங்கள் மூலமும் எந்த நிபந்தனையும் இன்றி ஒன்றிணைய வேண்டும் என கூறி வருகின்றனர். எனவே இந்த தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் வெற்றி பெற முடியும். கட்சியிலிருந்து வெளியில் சென்ற முக்கிய பதவி வகித்தவர்களை ஒன்றிணைத்தால் வெற்றி என்ற இலக்கை மட்டும் இல்லை மாபெரும் வெற்றியை அடைய முடியும் என பேசியிருந்தார்.
இந்த நிலையில், மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்திற்காக இன்று திண்டுக்கல்லில் தங்கியிருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி, தலைமை நிலையச் செயலாளர் எஸ் பி வேலுமணி வந்துள்ளார்கள். இவர்களுடன் செங்கோட்டையன் பேச்சு தொடர்பாக இபிஎஸ் அவசர ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனின் கருத்தை ஏற்க மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. செங்கோட்டையனின் ‘பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும்’ என்ற கோரிக்கை கட்சிக்குள் மீண்டும் குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும்.
கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த செங்கோட்டையன் முயற்சிக்கிறார். அதனால் அவரது கருத்தை ஏற்க முடியாது. சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்டோர் கட்சியில் இணைய வாய்ப்பு இல்லை. கட்சி தற்போது ஒற்றைத்தலைமையில் வலுவாக இருந்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் நேரத்தில் இது போன்ற செயல்கள் கட்சியை பலவீனப்படுத்தும். செங்கோட்டையன் தொடர்ந்து கட்சி சார்ந்த கருத்துக்களை பொது வெளியில் பேசினால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இபிஎஸ் நிர்வாகிகளிடையே எச்சரித்ததாக தெரிகிறது. உட்கட்சி விவகாரம் பொதுவெளியில் பேசினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். “தேர்தல் நேரத்தில் செங்கோட்டையனை அமைதியாக இருக்க சொல்லுங்கள்” தேர்தலுக்கு பிறகு இணைப்பு குறித்து பார்க்கலாம் என நிர்வாகிகளிடம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.