பொய் வழக்குகளில் தமிழின உணர்வாளர்கள் வாழ்வை அரசு சிதைப்பதாக தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.
வெடிகுண்டு வழக்கு
அக்டோபர் 17 2022 அன்று வெடிகுண்டு வழக்குகளுக்கான பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ஜேசுராஜ் (எ) ராஜேந்திரன், கணேசன் ஆகிய இரு தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் 2011 ஆண்டு இலங்கைக்கு வெடிகுண்டு கடத்தியதாக உளவுத் துறையினரால் புனையப்பட்ட பொய் வழக்கின் பெயரில் பத்தாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளனர்.
மேலும் படிக்க : காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொடூர தாக்குதல்!
ஊடகங்களில் பரப்பப்படும் வதந்தி
கைது செய்யப்பட்ட இருவரும் தமிழ் நாட்டை சார்ந்தவர்களாக இருக்க அவர்களை இலங்கை தமிழர்கள் என்று ஊடகங்களில் செய்தி பரப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் தமிழின உணர்வாளர்கள் இலங்கைக்கு வெடிபொருள் கடத்த முயன்றனர் எனும் பெயரில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவது ராஜீவ் காந்தி கொலை வழக்கிற்கு பின்பு ஆண்டு தோறும் தொடர் போக்காக உள்ளது. இதனை விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடையை நீட்டிக்கும் நோக்கத்திற்காக இந்திய அரசு செய்து வருகிறது என கூட்டமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிணை மறுப்பு - சிறை - தண்டனை!
பிணை வழங்காமல் விசாரனை கைதிகளாகவே பல ஆண்டுகள் சிறை வைத்திருப்பதும்.பத்தாண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதித்து வாழ்வை அழிப்பதுமான போக்கு தொடர் கதையாக உள்ளது.
இந்திய ஆளும் வர்க்கமும் அரசும் தமிழ் நாட்டில் இன உணர்வு அரசியலை இன உணர்வு கொண்ட தமிழர்களின் வாழ்வை அழிப்பதன் மூலம் தடுக்க நினைக்கிறது. இப்போது தொடங்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வு முகமை (NIA) அமைப்பும் முழு வீச்சில் இத்தகைய வேலைகளை செய்து வருகிறது.
கூட்டமப்பு கோரிக்கை
தமிழ் நாட்டில் சனநாயக ஆற்றல்கள் மனித உரிமை சார்ந்த செயல்பாட்டாளர்கள் தமிழின உணர்வாளர்களுக்கு நேரும் இந்த கொடுமைகளுக்கு எதிராக குரலெழுப்ப வேண்டும் எனவும் அவர்களை விடுவிக்க அரசியல் வகைப்பட்ட வேலைகளை ஒருங்கிணைந்து செய்ய வேண்டும் எனவும் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.