Malesia accident  
தமிழ்நாடு

மலேசியாவில் உயிருக்கு போராடும் மகன் - மீட்க போராடும் பெற்றோர்கள்

வெளி உலகம் தெரியாது படிப்பறிவு இல்லாத பெற்றோர் உயிருக்கு போராடும் தனது மகனை நினைத்து வீட்டில் அழுதபடி சோகமாக அமர்ந்துள்ளனர்.

Anbarasan

மலேசியாவில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் ஆண்டிப்பட்டி கூலித்தொழில் செய்யும் தம்பதியின் மகன்... மகனை மீட்டு காப்பாற்ற அரசுக்கு பெற்றோர் கண்ணீருடன் கோரிக்கை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டி சத்யா நகரை சேர்ந்த சேதுராமன் - முனியம்மாள் தம்பதிக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சேதுராமன் கை தையல் மிஷின் வைத்து பழைய துணிகளை தைத்து வருகிறார். முனியம்மாள் வீடுகளில் பாத்திரம் தேய்த்து கூலி வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியின் இளைய மகன் கார்த்திக் என்பவர் டிப்ளமோ படித்துவிட்டு கடந்த 3 ஆண்டுகளாக மலேசிய நாட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் சொந்த ஊருக்கு வந்து பெற்றோருடன் தங்கி விட்டு மீண்டும் மலேசியா சென்று இருந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மலேசியா நாட்டில் நடந்த ஒரு விபத்தில் கார்த்திக் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆண்டிபட்டியில் உள்ள பெற்றோருக்கு செல்போன் மூலம் தகவல் வந்தது. மேலும் கார்த்திக்கை காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதற்கு 60 முதல் 70 லட்சம் வரை செலவாகும் என்றும் கூறப்பட்டதாக தெரிகிறது. மேலும் பாஸ்போர்ட் உள்ளவர்கள் உடனடியாக மலேசியா கிளம்பி வரும்படியும் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கூலித்தொழிலாளி தம்பதியினர் செய்வதெறியாது தவித்து வருகின்றனர். பெற்றோர் இருவரும் ஆண்டிப்பட்டியை தவிர்த்து வேறு எந்த ஊருக்கும் இதுவரை சென்றதில்லை என்றும், உயிருக்கு போராடும் தனது மகனை காப்பாற்றி இந்தியா கொண்டு வரும்படியும் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மேலும் தனது மகனை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். வெளி உலகம் தெரியாது படிப்பறிவு இல்லாத பெற்றோர் உயிருக்கு போராடும் தனது மகனை நினைத்து வீட்டில் அழுதபடி சோகமாக அமர்ந்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்