தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், “சட்டப்பேரவையில் ‘அப்பா எங்கே, அப்பா எங்கே’ என்று தேடினால் எப்படி தெரியும்? வீட்டுக்குச் சென்று அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என்று சொல்வார்கள். சட்டப்பேரவையில் அப்பாவைத் தேடினால் யாருக்குத் தெரியும்?” என்று கூறினார்.
முன்னதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைக் குறிப்பிடும் வகையில் பேரவையில் முதலமைச்சர் விஜய், “எங்க அப்பாவைக் காணோம்” என்று பேசியிருந்தது விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
இப்போது முதல்வர் விஜய்யின் குடும்பத்தை அநாகரிகமாகப் பேசியதற்கு நயினார் நாகேந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தவெக அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் வன்னி அரசு, "தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குறித்தும், அவரது குடும்பம் குறித்தும் மிக மோசமான அருவருக்கத்தக்க வகையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின் பேசிய அநாகரிகமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
பாஜக சனாதனிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி குறித்து இந்திய தலைமை அமைச்சர் மோடி பேசாத அவதூறா?
காஷ்மீரில் 8 வயது ஆசிபாவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தி, 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை விடுதலை செய்து, வரவேற்பு அளித்தவர்கள் தான் பாஜகவினர்.
பெண்களுக்கு எதிரான வெறுப்பும், அவதூறும் தான் அவர்கள் பேசும் அரசியலின் அடிப்படை. இதற்கு முன்னரும் நடிகை ஒருவர் குறித்தும் நயினார் அவர்களின் பேச்சு தரம் தாழ்ந்து அமைந்திருந்தது.
நயினார் நாகேந்திரன் அவர்கள் தமது அநாகரிகமான பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்!" என எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்