vijay in campaign 
தமிழ்நாடு

“யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல” விஜய் -க்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம்..!

ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளின் பேரணி, பொதுக்கூட்டங்களுக்கு அவர்கள் விரும்பிய இடத்தில் காவல்துறை...

Mahalakshmi Somasundaram

அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளார். கடந்த 13 -ம் தேதி திருச்சியில் பிரச்சாரத்தை துவங்கிய அவர், செப்டம்பர் 20 -ம் தேதி முதல் டிசம்பர் 20 -ம் தேதி வரை ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளதாக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி பிரச்சாரத்துக்கு கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, விஜய் பிரச்சாரத்துக்கு அனுமதி  கோரும் விண்ணப்பங்களை எந்த பாரபட்சமும் இன்றி பரிசீலித்து, அனுமதி வழங்க மாநிலம் முழுவதும் உள்ள  காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்க டிஜிபி-க்கு உத்தரவிடக் கோரி, த.வெ.க துணைப்பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளின் பேரணி, பொதுக்கூட்டங்களுக்கு அவர்கள் விரும்பிய இடத்தில் காவல்துறை அனுமதி வழங்குவதாகவும், அதேபோல த.வெ.க.வுக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்கக் கோரியும்  கடந்த 9 மற்றும் 15 -ம் தேதிகளில்  டிஜிபி-யிடம் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, த.வெ.க சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளையும், மற்ற கட்சிகள் மீது விதிக்கப்படாத நிபந்தனைகளும் த.வெ.க.வுக்கு விதிக்கப்படுவதாக கூறினார். 

எந்த வழியாக சென்னை திரும்ப வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், எத்தனை வாகனங்கள் வர வேண்டுமெனவும் நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும் வாதிட்டார்.

கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் வரக்கூடாது என நிபந்தனைகளை விதிக்கிறார்கள். அவர்களை வர வேண்டாம் என நாங்கள் எப்படி சொல்ல முடியும்? என கேள்வி எழுப்பினார்.

இது போன்ற நிபந்தனைகள் அனைத்து கட்சிகளுக்கும் விதிக்கப்படுவது தானே? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

 முழுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல. பொதுக்கூட்டம் நடத்தினாலும் சட்டத்திற்குட்பட்டு நடத்த வேண்டும். 

தலைவராக இருக்கும் நீங்கள் தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். சேதப்படுத்தப்பட்ட பொதுசொத்துகளுக்கான இழப்பீடு வசூலிக்கப்பட்டதா? இல்லையென்றால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட நேரிடும் எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். 

கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் வர வேண்டாம் என கோரிக்கை விடுத்து மற்றவர்களுக்கு நீங்கள் முன்மாதிரியாக திகழலாமே? என நீதிபதி அறிவுறுத்தினார். 

காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் இ.ராஜ் திலக், எந்த இடத்திலும் அனுமதி மறுக்கப்படாமல், நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுவதாக கூறினார். திருச்சி பரப்புரையின் போது தவெக தொண்டர்களின் செயல்களை புகைப்படமாகவும் காவல்துறை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 

அதனை பார்த்த நீதிபதி, இவர்கள் இது போன்று உயரமான இடங்களில் ஏறி நின்று ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது? இதனை நீங்கள் ஒழுங்குபடுத்த வேண்டாமா? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். 

அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்க  அறிவுறுத்திய நீதிபதி, பொதுச்சொத்துகள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்கும் விதமாக ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் வகையில் விதிமுறைகளை வகுக்க நீதிபதி உத்தரவிட்டார். விதிமுறைகள் குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கை   செப்டம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.