சட்டமன்றத்தில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறைக்கான மானியக்கோரிக்கை விவாதத்தில் பதிலுரை அளித்தார் முதலமைச்சர் விஜய்.
அதில் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். விமர்சனங்களுக்கு பதிலளிக்க திமுகவினர் வாய்ப்பு கேட்டும் பேச அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்தநிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விஜய்யின் பேச்சை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கனிமொழியின் எக்ஸ் தள பதிவில், "வரலாறு பேச வேண்டுமென்றால், நீதிக்கட்சி காலத்திலிருந்து தொடங்க வேண்டும். இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக நாங்கள் என்ன செய்தோம் என்பதிலிருந்து தொடங்க வேண்டும்.
ஆனால், தவெகவிற்கும், அதன் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும் அந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தலைவர் கலைஞரைப் பற்றியோ, தி.மு.க.வைப் பற்றியோ அவதூறாகப் பேசுவதையே அரசியல் தகுதியாக இன்னும் எத்தனை காலத்திற்கு நினைத்துக் கொள்ளப்போகிறார்கள் என்று தெரியவில்லை. எல்லாவற்றையும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கும் வரை, எதை வேண்டுமானாலும் பேசுவதற்கு ஒரு கூட்டமும் இருந்துகொண்டுதான் இருக்கும்.
காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை அளிக்க வேண்டிய முதலமைச்சர், எழுதிக் கொடுத்ததைப் படிப்பதைத் தவிர, கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல், நீண்ட சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு, எதிர்வினை வந்துவிடுமோ என்ற பயத்தில் விவாதத்தையே சபாநாயகர் தவிர்த்திருக்கிறார்.
கடந்த மூன்று நாட்களாக காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்க ஒத்திகை பார்த்தும், அந்த மானியக் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் பேசியது சொற்பமே.
மற்றவை எல்லாம் காலம் காலமாகப் பரப்பப்பட்ட வதந்திகளையும், சமீபத்திய WhatsApp factory பொய்களையும் கலந்து, முதலமைச்சருக்கு ஒரு பிரதியைக் கொடுத்துவிட்டார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. சட்டம்-ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் & பெண்களின் பாதுகாப்பு குறித்தும், பிற மக்கள் பிரச்சனைகள் குறித்தும் பேச வேண்டிய சபை, இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது. ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது...
Not everything loud is true" எனப் பதிவிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்