2021 சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து பல கட்டங்களாக சட்டப் போராட்டம் நடத்தி வந்தார் ஓபிஎஸ். எனினும், அதிமுக எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டுக்குள் சென்றது. ஓபிஎஸ் தற்போது "அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு" என்ற பெயரில் தனிக்குழு அமைத்து செயல்பட்டு வருகிறர்.
அதிமுகவில் இருந்தாலும் கடந்த பல ஆண்டுகளாக பாஜகவுடன் ஓ.பன்னீர்செல்வம் மிகவும் நெருக்கம் காட்டி வந்தார். தனது அரசியல் காட் பாதராகவே பிரதமர் மோடியை நினைத்துக்கொண்டார். அதாவது பிரதமர் கூறியதால்தான் துணை முதல்வர் பொறுப்பை ஏற்றேன் என்று சொல்லும் அளவுக்கு நெருக்கம் இருந்தது. இதனிடையே எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பு வகிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் 2022ஆம் ஆண்டு கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்கு எதிராகவும், அதிமுக உள்விவகாரங்கள் குறித்தும் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் இன்னும் நிலுவையில்தான் இருக்கிறது.
இதனையடுத்து பாஜக மீதான தனது அதிருப்திகளை ஓபிஎஸ் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தார். குறிப்பாக அமித்ஷா சென்னை வந்தபோது தன்னை சந்திக்காதது வருத்தம் அளிப்பதாக வெளிப்படையாகவே பேசியிருந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இதுவரை நீடிக்கிறோம் என்றெல்லாம் சொன்னார். ஆனாலும், ஓபிஎஸ்ஸை கூட்டணியில் ஏற்க எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாய் மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில்தான் சமீபத்தில் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்துவதற்க்கு தமிழகம் வந்தார். அப்போது பிரதமர் மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்து ஓபிஎஸ் வெளிப்படையாகவே கடிதம் அனுப்பினார். ஆனால் அவரை சந்திக்க பிரதமர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ஓபிஎஸ் தரப்பு கடும் அதிருப்திக்கு உள்ளானது.
சில தினங்களுக்கு முன்னர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர் செல்வம் வியாழக்கிழமை சென்னையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவேன். அதில் உங்கள் கேள்விகள் அனைத்திற்கும் அப்போது பதில் கிடைக்கும் என பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு காரணம் அதிமுக -பாஜக இருவருமே அவரை கைவிட்டதுதான் காரணம் என பேசப்பட்ட நிலையில், தற்போது, பாஜக கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் தலைமையிலான அணி விலகுவதாக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திர, “பாஜக ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு விலகுகிறது. பாஜக எங்களுக்கு என்ன செய்தது என்பதை நாடே அறியும். ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களையும், தொண்டர்களையும் சந்திப்பார், எதிர்கால கூட்டணி யாரோடு என்பது பற்றியெல்லாம் பின்னர் முடிவெடுக்கப்படும்” என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.