இன்று சட்டபேரவை தொடங்கிய சில நிமிடங்களிலையே எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட தொடங்கினர். தங்களது கவன ஈர்ப்பு தீர்மானங்கள் குறித்து உடனடியாக பேச அனுமதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் முதல்வர் விஜய்யின் பதிலுரைக்கு பின்னே எதிர்க்கட்சியினரை அனுமதிக்க முடியும் என்று சபாநாயகர் தெரிவித்திருந்தார். பின்னர் முதல்வர் விஜய் பதிலுரையை தொடங்கி பார்ட்டி பண்ட் மற்றும் கடந்த ஆட்சியில் நடந்த சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து பேசினார்.
மேலும் பெண்கள் குறித்து அவதூறாக பேசுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார். சமீப காலமாக "ஆபாச நதி, வன்ம நதி"யாக ஓடுவதாகவும், அதனை மக்கள் பார்ப்பதாகவும் பேசினார். பெண்கள் குறித்து அவதூறாக 'டபுள் மீனிங்'-கில் பேசுவது போன்றவற்றை மக்கள் பார்ப்பதாகவும், அதனால் பொறுப்புணர்வுடன் பேசுமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார். பெண்களை குறித்து யாராவது அவதூறாகவோ அல்லது ஆபாசமாகவோ பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும் என்று முதல்வர் தெரிவித்தார்.
முதல்வர் விஜய்யின் பதிலுரைக்கு பிறகு பேசிய சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பெண்கள் மீதான அவதூறு கருத்துக்களை தவெக-வினரும் செய்வதாக குற்றம் சாட்டினார். அவர் பேசியதாவது, “பெண்களை குறித்து யாரும் தவறாக எங்கும், எந்த செய்திகளிலும் பேச கூடாது.. அப்படி பேசினால் இந்த அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் கூறிய கருத்தை, ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினராக வரவேற்கிறேன்; அவர் சொன்ன கருத்து எல்லோருக்கும் பொதுவான கருத்தாக இருக்க வேண்டும்.
இன்றைக்கு பெண் தலைவர்களாக இருக்கும் அத்தனை பேருமே.. சமூக வலைதளங்களில்.. மிக மிக கொச்சையாக, ஆபாசமாக பேசுவதில் தவெக உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை. இதையும் முதல்வர் கவனத்தில் கொண்டு தவெக உறுப்பினர்களையும் கண்டிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் CTR நிர்மல் குமார்.. “யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்” என்றும் “திமுகவினர் சிலர் எங்கள் கட்சியின் பெயரில் 'FAKE ID' FAKE ID கிரியேட் செய்து இது போல் அவதூறுகளை பரப்புகின்றனர்” என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கேப்டன் விஜயகாந்திற்கு என்ன என்ன சங்கடம் ஏற்படுத்தினார்களோ, அதைதான் எங்களுக்கும் செய்கிறார்கள் என்றும் தவெக வில் யார் தவறாக பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றும் குறிப்பிட்டார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்