

3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. பேரவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் தொடர்ந்து நடைபெறும் கொலை சம்பவங்களை சுட்டிக்காட்டி, திமுக உறுப்பினர்கள் “தலைநகரமா? கொலைநகரமா?” என முழக்கங்களை எழுப்பினர். தங்களது கவன ஈர்ப்பு தீர்மானங்கள் குறித்து உடனடியாக பேச அனுமதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனால் சட்டப்பேரவை தொடங்கிய உடனேயே கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
பின்னர் முதல்வர் விஜய்யின் சுமார் ஒரு மணி நேர பதிலுக்கும் பின், திமுக மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சியினர் பதிலளிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, சபாநாயகர் முன்னிலையில் தர்ணாவில் ஈடுபட்டனர். எதிர்கட்சியினருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை அடுத்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் “சபாநாயகர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக” குற்றம் சாட்டினார். மேலும் முதல்வர் மற்றும் ஆளும் தவெக அரசின் அமைச்சர்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
எதிர்க்கட்சி தலைவர் பேசியதாவது, "எங்களின் ஒரு கேள்விக்கு கூட முதல்வர் பதிலளிக்கவில்லை. ரீல்ஸிற்காக மட்டுமே முதல்வர் பேசியிருந்தார். அதே Punch டயலாக், அதே சினிமா வசனங்கள், அதே ஆக்டிங். ரீல்ஸ்க்காக மட்டுமே இன்று பதிலுரை வழங்கியுள்ளார்" என்றும் "மிஷாவை பற்றி பேச விஜய்க்கு தகுதி இருக்கா..? யாரோ எழுதி கொடுத்ததை 3 நாளா மனப்பாடம் செய்து விட்டு இங்கு வந்து வாந்தி எடுக்கிறார்" என்று கட்டமாக முதல்வர் விஜயின் பதிலுரையை விமர்சனம் செய்தார். மேலும் "சர்க்காரியா கமிஷனில் எந்த தவறும் நடக்கவில்லை என்று அந்த கமிஷனே தெரிவித்துள்ளது. மிஷாவை பற்றி பேசுகிறாரே.. கொடநாட்டில் தன்னுடைய பட ரிலிஸுக்காக வாட்ச்மேன் வேலை பார்த்தவரு தான் இந்த முதலமைச்சர். இவருக்கு எங்கள் தலைவர் பற்றியோ மிஷாவை பற்றியோ பேச 1% சதவீதம் கூட தகுதி இல்லை. இவர் அரசியலுக்கு வந்ததே ஒரு ஆக்சிடென்ட்.. இந்த ஆட்சியே ஒரு விபத்து. திமுகவினர் மீது பொய் குற்ற சாட்டுகளை அடுக்குகிறார்" என்று குறிபிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர் "முதலமைச்சர் மீதே வருமான வரித்துறையில் வழக்கு உள்ளது. 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதை மறைத்ததாக அவர் மீது வழக்கு உள்ளது. வருமானத்தை மறைச்சதுக்கு வழக்கு போட்டா.. 'ரொம்ப லேட்டா வழக்கு போட்டுட்டீங்க' என்று நீதிமன்றத்தில் ஓபனாக ஒப்புக்கொண்டவர் தான் இன்றைய டம்மி முதல்வர்" என்று கட்டமாக விமர்சித்திருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்