தமிழ்நாடு

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு!

Malaimurasu Seithigal TV

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று காலையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  செய்யப்பட்டார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும், அமைச்சர்கள் நேரில் சந்தித்து, நலம் விசாரித்தனர். இந்நிலையில், இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் 3 இடங்களில் அடைப்பு உள்ளது என்றும் உடனடியாக பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 இந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்ட அறையில் சுமார் 30 நிமிடங்கள் விசாரணை நடத்தினார். 

விசாரணைக்குப் பின், அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ மற்றும் வில்சன் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதி அல்லி பிணை வழங்க மறுத்து வழக்கை நாளைய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.