Tamil Nadu Assembly Bypolls (ai image) 
தமிழ்நாடு

“2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்” - மீண்டும் சூடுபிடிக்கும் அரசியல் களம்.. தவெகவிற்கு புதிய சிக்கலா.. விஜய்யின் ஆதரவு யாருக்கு?

இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்கு வலுசேர்க்கும்...

Mahalakshmi Somasundaram

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் நடந்த அரசியல் மாற்றங்களில் சில தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் வாபஸ் பெற்ற நிலையில் அந்த தொகுதிகள் தற்போது காலியாக உள்ளது. இந்த நிலையில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு (அக் -06) இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இரு தொகுதிகளிலும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் காரணமாக, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகள் காலியாகின. அதிமுக சார்பில் வெற்றி பெற்றிருந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) மற்றும் சத்யபாமா (தாராபுரம்) ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்த இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, இடைத்தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. மேலும் மாவட்ட நிர்வாகத்தினருக்கும் தேர்தல் பணிகளைத் தயார்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்தன.

மீண்டும் களமிறங்கும் அரசியல் கட்சிகள்

தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது, கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவது உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த தேர்தலில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு நடைபெறும் இந்த இடைத்தேர்தல், ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்கு வலுசேர்க்கும் என்பதால் தேர்தல் களம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்பாளர் தேர்வு முதல் பிரசாரம் வரை.. இனி பரபரப்பு

இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, கட்சிகளுக்குள் வேட்பாளர் தேர்வு தொடர்பான ஆலோசனைகள் தொடங்கும். தொகுதியில் நிலவும் உள்ளூர் அரசியல் சூழல், வாக்காளர்களின் மனநிலை, கடந்த தேர்தல் வாக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்சிகள் வியூகம் வகுக்க உள்ளன. ஏற்கனவே அந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தற்போது அவர்கள் பதவியை ராஜினாமா செய்து ஆளும் கட்சியான தவேகவில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர்.  எனவே மீண்டும் அந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அதே வேட்பாளர்களுக்கு கொடுக்கப்படுமா? அல்லது தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கு வாய்ப்பளிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

அதே போல தற்போது ராஜினாமா செய்த வேட்பாளர்கள் மீது மக்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் மீண்டும் அங்கு அதே நபர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டால் மக்களின் அதிருப்தி எதிர் கட்சிக்கு சாதகமாக அமையுமா? என அரசியல் வட்டாரங்களில் கேள்வி எழுந்துள்ளது.  இதனால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள் யார், எந்தெந்த கட்சிகள் கூட்டணி அமைக்கின்றன, வாக்காளர்கள் யாருக்கு ஆதரவு அளிக்கப் போகிறார்கள் என்பது அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்