ரூ.4,800 கோடி குடிநீர் திட்டம் முதல் சாலைகள் வரை... விஜய் அறிவித்த முக்கிய திட்டங்கள் என்னென்ன? 
தமிழ்நாடு

ரூ.4,800 கோடி குடிநீர் திட்டம் முதல் சாலைகள் வரை... விஜய் அறிவித்த முக்கிய திட்டங்கள் என்னென்ன?

"எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதாரமான, பாதுகாப்பான, பசுமையான, மக்கள் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களாக மாற்றுவது இன்றைய அவசியமாகும்." - முதலமைச்சர் விஜய்

மாலை முரசு செய்தி குழு

சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் பல்வேறு நகர்புற மேம்பாட்டு திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய்.

இதுகுறித்த உரையில், "தமிழ்நாட்டின் நகரங்களில் குடிநீர், பாதாள சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை, சாலைகள், பூங்காக்கள் மற்றும் பள்ளி வசதிகளை மேம்படுத்தும் வகையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

வேகமாக அதிகரித்து வரும் நகரமயமாக்கல் மற்றும் மக்கள் தொகைப் பெருக்கத்தால், குடிநீர், கழிவுநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து, பசுமை மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு தொடர்பான தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதாரமான, பாதுகாப்பான, பசுமையான, மக்கள் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களாக மாற்றுவது இன்றைய அவசியமாகும். இதனை முன்னிட்டு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்துவது அரசின் முக்கிய கடமை" எனப் பேசினார்.

தொடர்ந்து, பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் திட்டங்களை அறிவிக்கத் தொடங்கினார்.

குடிநீர்

  • வடசென்னை, ஆவடி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளில் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மீஞ்சூரில் நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ரூ.4,800 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

  • ஆவடி மாநகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணிநேரமும் குடிநீர் வழங்கும் வகையில் ₹500 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம் உருவாக்கப்படும்.

  • மதுரை மாநகராட்சி, கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் 20 பேரூராட்சிகளில் குடிநீர் வசதிகளை மேம்படுத்தும் வகையில் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழைய கூட்டு குடிநீர் திட்டங்களை சீரமைக்க, முதற்கட்டமாக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

  • சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை அதிகரிக்க, ரூ.410 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.

vijay in assembly

நவீன பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் மேலாண்மை

  • மதுரை மாநகராட்சியில் உள்ள 40 ஆண்டுகள் பழமையான பாதாள சாக்கடை அமைப்பை சீரமைக்க 2400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடப்பு ஆண்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

  • நாகர்கோவில் மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகள் மற்றும் குன்றத்தூர், நந்திவரம், கூடுவாஞ்சேரி நகராட்சிகளிலும் ரூ.960 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கப்படும்.

  • சென்னை பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை மேம்படுத்த ரூ.236 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

அறிவியல் பூர்வமான திடக் கழிவு மேலாண்மை மற்றும் மின் உற்பத்தி

  • திருநெல்வேலி மாநகராட்சியில் 256 கோடி மதிப்பீட்டில் 9 மெகா வாட் திறன் உற்பத்தி செய்யும் வகையிலும் சேலம் மாநகராட்சியில் 291 கோடி மதிப்பீட்டில் 10 மெகா வாட் திறன் உற்பத்தி செய்யும் வகையிலும் திடக்கழிவிலிருந்து எரிசக்தி உற்பத்தி செய்யும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்த திட்டங்கள் மொத்தம் ரூ.547 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

மேம்படுத்தப்பட்ட நகர்புற சாலைகள் மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு

  • குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட சேதமடைந்த சாலைகளை சிரமைக்கவும், புதிய சாலைகள் அமைக்கப்பவும், சென்னை உட்பட அனைத்து நகர்புற உள்ளாட்சிகளிலும் 1850 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

  • வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சியில் 45 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 35 கிலோமீட்டர் நீளத்திற்கு மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற நவீன சாலைகள் மற்றும் நடைபாதைகள் (People Friendly Modern Streets), பள்ளிகளைச் சுற்றி 15 கிலோமீட்டர் தூரத்திற்கு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் சாலை வசதிகள் (Safe Access to Schools) மற்றும் 105 சாலை சந்திப்புகளை மேம்படுத்தும் பணிகள் ரூ.110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

  • பிற மாநகராட்சிகளிலும் இதே போன்ற நவீன சாலைகள் மற்றும் நடைபாதைகள், பள்ளிகளைச் சுற்றியுள்ள பாதுகாப்பான சாலை வசதிகள், சாலை சந்திப்பு மேம்பாட்டுப் பணிகள் ரூ.165 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

  • இப்பணிகள் அனைத்தும் ரூ.275 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டமாக செயல்படுத்தப்படும்.

schemes

நகர்ப்புற பசுமையாக்கல் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள்

  • சுற்றுச்சூழலை பாதுகாக்க மற்றும் நகரங்களின் பசுமை பரப்பை அதிகரிக்கவும், பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு பசுமை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

  • மக்கள் இயக்கமாக ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும்.

  • திருச்சி, திருப்பூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரிய பூங்காக்கள் ரூ.130 கோடி ரூபாய் செலவிலும், மாநில முழுவதும் 250 புதிய பூங்காக்கள் ரூ.175 கோடி ரூபாய் செலவிலும், ஆக மொத்தம் ரூ.305 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்

  • நகர்ப்புற உள்ளாட்சிகளில் பள்ளிகளில் தரமான கல்வி மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்கும் வகையில் புதிய வகுப்பறைகள் கட்டுதல் மற்றும் நவீன வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகள் மொத்தம் ரூ.335 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

பாரம்பரிய நகரங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களின் சீரமைப்பு

  • சிதம்பரம் நகராட்சியில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற அருள்மிகு தில்லை நடராஜர் திருத்தேர் விழாவை சிறப்பாக நடத்தவும், பக்தர்களுக்கு எந்தவித இடையூறின்றி தரிசனம் செய்யவும், கோவிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளில் உள்ள பாதாள சாக்கடை வசதிகளை மேம்படுத்தி வான்வழி செல்லும் மின்சார கம்பிகளை தரைக்கடியில் கொண்டு சென்று வீதிகளை நவீன முறையில் சீரமைக்க ₹36 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

  • கடலூரில் தேவி கோட்டம் முதல் வெள்ளி கடற்கரை வரை ₹8 கோடி மதிப்பீட்டில் பாரம்பரிய நடைபாதை (Heritage Walk) அமைக்கப்படும்.

  • கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளை அகலப்படுத்தி, சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த ₹50 கோடி செலவிடப்படும்.

சமச்சீர் வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாடு

  • சென்னை மாநகராட்சியில் உட்கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் சாலைகள், மழைநீர் வடிகால்கள், தெருவிளக்குகள், நடைபாதைகள், திடக்கழிவு மேலாண்மை வசதிகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த ₹100 கோடி செலவிடப்படும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்