ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் ஊராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் புறக்காவல் நிலையத்தில் ஏட்டு முருகன் (38) ஒரு பெண் போலீஸ் உட்பட இரு போலீசார் இரவு நேர பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 5 -க்கும் மேற்பட்ட நபர்கள் போலீஸ்காரர்களை தாக்க முற்பட்டனர். அதில் ஒருவர் ஏட்டு முருகனை விரட்டி விரட்டிச் சென்று அரிவாளால் வெட்ட முயன்றார். இதில் முருகன் சுதாரித்துக்கொண்டு தப்பினார். எனினும் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த கும்பல் தப்பி ஓடியது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தென்காசி எஸ்.பி அரவிந்தன், ஆலங்குளம் டி.எஸ்.பி கிளட்ஸன் ஜோஸ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த 30 வயது முத்துப்பாண்டி என்பவர் மூன்று ஆண்டுகளுக்கும் திருமணம் செய்துள்ளார். தம்பதிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி கணவனை விட்டுப் பிரிந்து நெட்டூரில் வசித்து வருகிறார். முத்துப்பாண்டி அடிக்கடி நெட்டூர் வந்து மனைவியிடம் தகராறு செய்வார் என கூறப்படுகிறது. இதுகுறித்து ஆலங்குளம் காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் இரு தினங்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். மனைவிக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக கருதிய முத்துப்பாண்டி ஆத்திரமடைந்து தனது உறவினர்களுடன் போலீசாரத் தாக்க முற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து முத்துப்பாண்டி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்த ஆலங்குளம் போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.