keerthana  
தமிழ்நாடு

விஜய் கேபினட்டில் நுழைந்த 29 வயது இளம் புயல்.. 5 மொழிகள் பேசும் மல்டி டேலன்ட்.. யார் இந்த கீர்த்தனா?

திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகளுக்காகத் தேர்தல் களத்தில் பணியாற்றியுள்ளார்...

மாலை முரசு செய்தி குழு

தமிழக வெற்றிப் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில், வெறும் 29 வயதேயான எஸ். கீர்த்தனா மிகவும் இளம் வயது அமைச்சராக உருவெடுத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற இவர், தமிழக அரசியலில் கட்சியின் புதிய முகமாகப் பார்க்கப்படுகிறார். சிறுவயது முதலே அரசியலில் ஆர்வம் கொண்டதால் தான் அரசியல் வியூக வகுப்பாளர் (Political Strategist) பணியைத் தேர்ந்தெடுத்ததாகக் கீர்த்தனா தெரிவித்துள்ளார். அமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்னதாக அளித்த பேட்டியில், பல தலைவர்களுடன் பணியாற்றியதன் மூலம் அரசு நிர்வாகம் மற்றும் அதிகார வர்க்கம் எப்படிச் செயல்படுகிறது என்பதைத் தான் ஆழமாகப் புரிந்து கொண்டதாக அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.

1996 ஆம் ஆண்டு விருதுநகரில் பிறந்த கீர்த்தனா, ஒரு தமிழ் வழி அரசுப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பயின்றார். பின்னர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி கணிதமும், 2019-ல் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புள்ளிவிவரத் துறையில் (Statistics) எம்.எஸ்.சி பட்டமும் பெற்றார். நேரடி அரசியலில் குதிப்பதற்கு முன்பே, இவர் பிரபல அரசியல் ஆலோசனை நிறுவனங்களான ஷோடைம் கன்சல்டிங் மற்றும் ஐபேக் (IPAC) ஆகியவற்றில் டிஜிட்டல் பிரச்சார வியூக வகுப்பாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். குறிப்பாகத் தெலுங்கு தேசம், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகளுக்காகத் தேர்தல் களத்தில் பணியாற்றியுள்ளார்.

தனது தொழில்முறை பயணத்தின் போது முன்னாள் முதலமைச்சர்கள் ஸ்டாலின், மம்தா பானர்ஜி மற்றும் தற்போதைய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு போன்ற ஜாம்பவான்களுடன் இவர் பணியாற்றியுள்ளார். இந்த அனுபவம் தனக்கு ஆட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளப் பெரிதும் உதவியதாகக் கீர்த்தனா கூறுகிறார். இவரது மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளை மிக சரளமாகப் பேசும் திறன் படைத்தவர். மொழிகளைக் கற்றுக் கொண்டது வெவ்வேறு மாநிலங்களில் பணியாற்றவும், மக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளவும் தனக்கு வாய்ப்புகளை வழங்கியதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்திய அளவில் விஜய்யின் கொள்கைகள் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே தான் இந்தி மொழியைக் கற்றுக் கொண்டதாகக் கீர்த்தனா கூறினார். 2026 சிவகாசி சட்டமன்றத் தேர்தலில் 68,709 வாக்குகளைப் பெற்ற இவர், காங்கிரஸ் வேட்பாளர் அசோகனை 11,670 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதன் மூலம் கடந்த எழுபது ஆண்டுகளில் சிவகாசி தொகுதியில் முன்னாள் அதிமுக அமைச்சரை வீழ்த்திய முதல் பெண் எம்.எல்.ஏ என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். மிக இளைய வயதிலேயே சிவகாசி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுச் சட்டமன்றத்திற்குள் நுழைந்துள்ளார் கீர்த்தனா.

தான் ஏன் தமிழக வெற்றிப் கழகத்தைத் தேர்ந்தெடுத்தேன் என்பது குறித்து விளக்கிய கீர்த்தனா, டிவிகே என்பது அனைவரும் எளிதில் அணுகக்கூடிய ஒரு இடமாக இருப்பதாகக் குறிப்பிட்டார். தனக்குப் பெரிய அரசியல் பின்னணியோ அல்லது பண பலமோ இல்லாவிட்டாலும், மக்களுக்காக எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் விஜய்யின் கட்சியில் வரவேற்பு கிடைக்கும் என்று அவர் உறுதியாகக் கூறினார். சாதாரணப் பின்புலத்தில் இருந்து வந்து, இன்று விஜய்யின் அமைச்சரவையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள கீர்த்தனாவின் வளர்ச்சி, பல இளைஞர்களுக்கு ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.