மறு உத்தரவு வரும் வரை குற்றாலம் மெயின் அருவியில், எந்தவிதமான கட்டுமான பணிகளும் மேற்கொள்ளக்கூடாது. சிற்பங்களை சிதைக்க கூடாது என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் மாதம் ஒத்தி வைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
மதுரையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி பகுதியில் புதிய ஆர்ச் கட்டுமான பணியின்போது, பாறையில் செதுக்கப்பட்டிருந்த பழமையான சிவலிங்க சிலைகள் சேதமடைந்து அடைந்தது. குற்றாலநாத சுவாமி கோவில் அருகே அமைந்துள்ள இந்த அருவி, ஆன்மிகத் தலமாகவும் முக்கிய சுற்றுலா மையமாகவும் உள்ளது. சிவன் நடனமாடிய ஐந்து சபைகளில் ஒன்றான சித்திர சபை குற்றாலத்தில் அமைந்துள்ளது.
மெயின் அருவியின் அடிப்பகுதியில் பல சிவலிங்கங்கள் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. அருவியில் வரும் மூலிகைத் தண்ணீரால் இயற்கை அபிஷேகம் நடைபெறுகிறது. பயணிகள் பாதுகாப்பிற்காக முன்பு பெரிய சிமென்ட் ஆர்ச் அமைக்கப்பட்டிருந்தது. அருவியின் நீர்வரத்தை கட்டுப்படுத்தவும் அந்த ஆர்ச் பயன்பட்டது.
தற்போது சீசனை முன்னிட்டு பழைய ஆர்ச்சை இடித்து புதியது அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிகளின்போது பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் இரும்பு பொருட்கள் காரணமாக சிலைகள் சேதமடைந்தன.
தொல்பொருள் மற்றும் கலை (Antiquity) பொக்கிஷமாகும், மேலும் இதற்கென தனியாக சட்டங்கள் உள்ளன. இந்த கோவில் வழிபாடு சம்பந்தப்பட்ட பொருட்கள் இந்தியாவின் பொக்கிஷங்களாக பாதுகாக்கப்பட வேண்டியவை. அவைகளை அழிக்கவோ, மாற்றம் செய்யவோ, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் மாற்றம் செய்யவோ முறையான உத்தரவு இல்லாமல் செய்ய முடியாது.
அருவி கரையில் பொறிக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை உடைத்து அப்புறப்படுத்தியது. சிலை திருட்டு தடுப்பு காவல் பிரிவு (Idol Wing CID) மூலம் முன்னாள் காவல்துறை ஐ.ஜி பொன்மாணிக்கவேல் பணிபுரிந்த காலத்தில் இந்த சட்டத்தின் கீழ் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்நிலையில் அருவியில் அமைந்துள்ள விநாயகர் திருவுருவம் மற்றும் சிவலிங்க திருவுருவம் அவைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்திலிருந்து (Place of Consecration) அப்புறப்படுத்தி தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும் அகற்றப்பட்ட திருவுருங்கள் வேறு இடங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு பின் நாட்களில் மக்களின் கவனத்தை திசை திருப்பி விட்டுவெளிநாடுகளுக்கு பல லட்ச ரூபாய்க்கு விற்கபடலாம் என்கிற ஐயம் ஏற்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் இதே போல பல கோவில்களில் சிலை திருட்டு சம்பவங்கள் நடைபெற்று, அவற்றில் பல அரசு அதிகாரிகள் மூலமே வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டுள்ளன.
பழங்கால திருவுருங்களை சிதைத்து அப்புறப்படுத்தி மேற்படி குற்ற செயலில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக விசாரணை செய்தும், விரைந்து வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேற்படி திருவுருவங்களை அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும், என்றார். இவர் திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்கையும் தொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்