டாஸ்மாக் கடைகளை எங்கு அமைப்பது என்பது அரசின் முடிவு எனவும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது..
சென்னை ஆர்.ஏ. புரம் மந்தைவெளி பேருந்து நிலையத்திற்கு எதிர்புறம் உள்ள டாஸ்மாக் கடை பள்ளி மற்றும் வழிபாட்டு தலத்திற்கு அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் வைக்கப்பட்டுள்ளதால் அதனை அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஶ்ரீவஸ்தவா, ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆஜரான தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், சம்மந்தப்பட்ட டாஸ்மாக் கடை குறித்து ஆய்வு செய்ததில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் வரவில்லை எனக்கூறினார்.
தடை செய்யப்பட்ட பகுதிக்குள் வராத கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனவும் வாதிட்டார்.
இதனையடுத்து, இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், அரசு தாக்கல் செய்த வரைபடத்தை ஆய்வு செய்ததில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை தடை செய்யப்பட்ட பகுதிக்குள் வரவில்லை என்பது தெளிவாகியுள்ளதாக கூறியுள்ளனர்.
டாஸ்மாக் கடைகளை எங்கு அமைப்பது என்பது அரசின் முடிவு எனவும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் பொது மக்கள் நலன் பாதிக்கப்படுவதற்கான உரிய ஆதாரம் இல்லாமல் டாஸ்மாக் கடை அமைக்கப்படும் இடங்கள் குறித்த விவகாரத்தில் தலையிட முடியாது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கில் இதற்கு மேல் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனக்கூறி ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.