பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டனாவோ பிராந்தியத்தில் நேற்று அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் நிலநடுக்கத்தால் அந்தப் பிராந்தியமே நிலைகுலைந்து போனது. கட்டிடங்கள் கடுமையாக அதிர்ந்ததோடு, பல இடங்களில் சுவர்கள் விரிசல் அடைந்துள்ளன. சில பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்திருப்பதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்படுத்திய அதிர்வுகள் நீண்ட நேரம் நீடித்ததால், மக்கள் மிகுந்த அச்சத்தில் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் உடனடியாக அறிவிப்பை வெளியிட்டது. பிலிப்பைன்ஸ் மட்டுமல்லாமல், மலேசியா மற்றும் இந்தோனேசியாவின் வடகிழக்கு கடலோரப் பகுதிகளிலும் சுனாமி தாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் உடனடியாகப் பாதுகாப்பான மற்றும் உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு உள்ளூர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கடற்பகுதிகளில் உள்ள படகுகள் மற்றும் கப்பல்கள் ஆழ்கடல் பகுதிக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
பிலிப்பைன்ஸ் நாடு, புவியியல் ரீதியாக ‘பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர்’ (Pacific Ring of Fire) எனப்படும் நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலைச் சீற்றங்கள் அதிகம் நிகழும் பகுதியில் அமைந்திருக்கிறது. இதனால் ஆண்டுதோறும் அங்குப் பல நிலநடுக்கங்களும், புயல்களும் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. இருப்பினும், இவ்வளவு பெரிய ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணியிலும், மீட்புப் பணிகளிலும் அரசு அதிகாரிகள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புப் பணிகளில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கடலோர மக்கள் யாரும் கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என்றும், தொடர்ந்து அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இயற்கையின் சீற்றத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் தவித்து வருகின்றனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பலமுறை நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அரசும் அனைத்துத் தரப்பு மீட்புப் படையினரையும் தயார் நிலையில் வைத்திருக்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.