சூப்பர் ஃபுட் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பல்வேறு ஊட்டசத்துகள் உள்ள உங்கள் டயட்டில் தவிர்க்க முடியாத உணவுகளை அந்த பெயரில் அழைக்கின்றனர்.
சமீப கால ஆய்வுகள் சூப்பர் ஃபுட்டாக முன்வைக்கும் உணவுதான் கரப்பான் பூச்சி பால். இத்தாலியில் உள்ள University of Teramo மற்றும் நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டேமில் உள்ள Erasmus University Rotterdam சேர்ந்து இந்த ஆய்வுகளை நடத்தியுள்ளன.
Diploptera punctata என்ற கரப்பான் இனத்திலிருந்து மட்டுமே பால் கிடைக்கும். இந்த வகை கரப்பான் முட்டை இடாமல் குட்டி போடக் கூடியது. தனது கூட்டிகளுக்கான ஊட்டசத்தை வழங்க நடுக்குடலில் புரதப் படிகங்களை (Protein crystals) உருவாக்குகிறது. இது மாட்டுப் பால் போல திரவ வடிவில் இருக்காது. ஆனால் மாட்டுப்பாலை விட 3 மடங்கு அதிக சக்தி நிறைந்தது.
சிலருக்கு இது அறுவறுப்பாக இருந்தாலும், இந்த கண்டுபிடிப்பு ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே கரப்பான் பூச்சி பால் குறித்து பேச்சுகள் இருந்துவருகின்றன. அதில் அதிக புரதச்சத்து, கொழுப்புச் சத்து, சர்க்கரை கொண்டிருப்பதனால் சத்து நிறைந்த ஆகாரமாகக் கருதுகின்றனர்.
கரப்பான் பூச்சியிலிருந்து வருவதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அதை உண்ண முன்வரமாட்டார்கள் என்றாலும், அதன் ஊட்டச்சத்து மிகுதிக்காகவும் எதிர்காலத்தில் அதிக சத்து வழங்கும் உணவாக நிலைபெறக் கூடும் என்பதனாலும் இந்த ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக உணவுத் தட்டுப்பாடு அல்லது பஞ்சம் ஏற்படும் காலங்களில் இது கைகொடுக்கும் எனக் கருதுகின்றனர்.
கரப்பான் பூச்சி பால் உற்பத்தி இன்றளவும் பெரிய அளவில் தொடங்காததால் நாம் இப்போது சந்தைகளில் வாங்கவோ பருகிப் பார்க்கவோ முடியாது. 100 மில்லி பாலுக்காகக் கிட்டத்தட்ட 1000 கரப்பான்களைக் கொல்ல வேண்டியிருக்கும் என்கின்றனர்.
எதிர்காலத்தில் ஒரு நபர் பால் அருந்த 1000 கரப்பான்களை உற்பத்தி செய்வது சவாலானதாக இருக்காது என்பதே சீனாவின் கரப்பான் பூச்சி பண்ணைகள் நமக்கு உணர்த்தும் செய்தி.
அந்த நாட்டில் வளர்ந்துவரும் ஆர்கானிக் தொழிலாக கரப்பான் பூச்சி வளர்ப்பு உள்ளது. சீனா முழுவதும் இருக்கும் 100க்கு மேற்பட்ட கரப்பான்பூச்சி வளர்ப்பு பண்ணைகளில் உலக மக்கள் தொகையை விட பல மடங்கு அதிக கரப்பான் பூச்சிகள் உள்ளன.
குட்டாக்டர் என்ற மருந்து நிறுவனம், ஒரு ஆலையில் ஆண்டுக்கு 600 கோடி கரப்பான் பூச்சிகளை உற்பத்தி செய்கிறது. இவற்றை பராமரிக்க செயற்கை நுண்ணறிவு ரோபோட்களை பயன்படுத்துகிறது.
கரப்பான் பூச்சிகளை நெருக்கடியாக பண்ணையில் வளர்ப்பது அருவருப்பானதாக தோன்றலாம். ஆனால் அந்த நிறுவனத்துக்கு இதிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் ஆயிரம் கோடிகளை கொட்டிக்கொடுக்கின்றன.
பொதுவாக சுவாசப் பிரச்னைகள் மற்றும் இரைப்பை பிரச்னைகளுக்கு சிறந்த மருந்தாக இந்த கரப்பான்பூச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன.
தவிர, வழுக்கை, வடுக்கள் ஏன் புற்றுநோய் கட்டிகளுக்கு எதிராக கூட கரப்பான் பூச்சி மருந்துகள் பயன்படுகின்றன.
விலங்குகளுக்கு கொடுக்கபடும் அதிக புரதம் கொண்ட உணவாக கரப்பான் பூச்சி இருக்கிறது. சில நேரங்களில் மனிதர்களும் இதனை உண்கின்றனர். பெரிய அளவில் செய்யும் போது கரப்பான் பூச்சி பால் என்ற துணை உணவையும் பெறுவது முடியாத காரியம் அல்லவே!
கரப்பான் பூச்சிகளுக்கு பராமரிப்பு செலவு மிகக் குறைவு. அவற்றை எந்த நோயும் எளிதில் தாக்குவதில்லை. கொஞ்சம் ஈரப்பதமான இருண்ட இடத்தில் எவ்வளவு நெருக்கடியையும் எளிதாக சமாளித்து வாழ்ந்துவிடும்.
இவற்றுக்கு உணவாக வீணாகும் உணவுப் பொருட்களை சேமித்துக் கொடுத்தாலே போதுமானது. கோடிக்கணக்கில் கரப்பான் பூச்சிகள் வளர்க்கப்படும் பண்ணையில் இருந்து ஒருவேளை அவை தப்பிவிட்டால் அது மோசமான விளைவை ஏற்படுத்தும் என்பது கவனிக்கத்தக்கது.
இதுபோன்ற கரப்பான் பூச்சி பண்ணைகள் ஊருக்கு ஒன்று அமைக்கப்பட்டால் ஊட்டசத்து பிரச்சனையை எளிதாக சமாளித்துவிடலாம். ஆனால் மக்கள் கரப்பான் பூச்சியை உணவாக ஏற்றுக்கொள்வார்களா என்பதே நம் முன்னிருக்கும் கேள்வி.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்