Operation Epic Fury 
உலகம்

ஈரான் போரில் அமெரிக்காவிற்குப் பெரும் பின்னடைவு! 42 விமானங்கள் நாசம் - அதிர்ச்சியில் பென்டகன்!

சி.ஆர்.எஸ் (CRS) அமைப்பு ஊடகச் செய்திகள் மற்றும் பென்டகன் அறிக்கைகளைத் தொகுத்து இந்த விவரங்களை வெளியிட்டிருக்கிறது...

மாலை முரசு செய்தி குழு

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் 'ஆபரேஷன் எபிக் பியூரி' (Operation Epic Fury) போரில், அமெரிக்கா தனது 42 போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்களைப் பறிகொடுத்துள்ளதாகத் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கக் காங்கிரஸ் ஆராய்ச்சி சேவை (Congressional Research Service - CRS) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை, போர்க்களத்தில் அமெரிக்கா சந்தித்துள்ள இந்த பெரும் இழப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது நிலவும் போர்ப் பதற்றம் மற்றும் தகவல்களை வகைப்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் காரணமாக, இந்த இழப்புகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மற்றும் சேதமடைந்த விமானங்களின் பட்டியலில், அமெரிக்காவின் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நான்கு F-15E ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானங்கள், ஒரு F-35A லைட்னிங் II போர் விமானம், ஒரு A-10 தண்டர்போல்ட் II தரைப்படைத் தாக்குதல் விமானம் ஆகியவை அடங்கும். இவை தவிர, ஏழு KC-135 ஸ்ட்ராடோ டேங்கர் எரிபொருள் நிரப்பும் விமானங்கள், ஒரு E-3 சென்ட்ரி AWACS கண்காணிப்பு விமானம், இரண்டு MC-130J கமாண்டோ சிறப்புப் படை விமானங்கள் மற்றும் ஒரு HH-60W ஹெலிகாப்டர் ஆகியவையும் இதில் அடங்கும். குறிப்பாக, 24 MQ-9 ரீப்பர் மற்றும் ஒரு MQ-4C ட்ரைட்டன் போன்ற அதிநவீன ஆளில்லா ட்ரோன்களும் இந்த இழப்பில் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ராணுவ நடவடிக்கைகளுக்காக இதுவரை சுமார் 29 பில்லியன் டாலர் செலவாகியுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. பென்டகன் நிதித்துறைத் தலைவர் ஜூலஸ் ஹர்ஸ்ட் III, மே 12-ம் தேதி நடந்த கூட்டத்தில் இதைக் குறிப்பிடும்போது, "சேதமடைந்த உபகரணங்களைப் பழுதுபார்ப்பதற்கும் அல்லது அவற்றை மாற்றுவதற்குமான செலவு மதிப்பீட்டைத் துல்லியமாகக் கணக்கிட்டதில், செலவு கணிசமாக உயர்ந்துள்ளது" என்று தெரிவித்தார். இதுவரையில் அமெரிக்க பாதுகாப்புத் துறை தனது போர்க்கள இழப்புகள் குறித்த விரிவான அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், சி.ஆர்.எஸ் (CRS) அமைப்பு ஊடகச் செய்திகள் மற்றும் பென்டகன் அறிக்கைகளைத் தொகுத்து இந்த விவரங்களை வெளியிட்டிருக்கிறது.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து இந்தப் போர் தீவிரமடைந்தது. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்சகட்டத் தலைவர் அலி கமேனி உட்படப் பல முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக ஈரான், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மற்றும் ராணுவத் தளங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. போரின் தீவிரத்தைக் குறைக்கும் விதமாக ஏப்ரல் மாதத்தில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சி.ஆர்.எஸ் வெளியிட்ட இந்த அறிக்கையை, ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்ச்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

"போர் தொடங்கிய சில மாதங்களிலேயே பில்லியன் கணக்கான மதிப்புள்ள தங்கள் விமானங்களை இழந்துவிட்டதை அமெரிக்காவே ஒப்புக்கொண்டுள்ளது. எஃப்-35 விமானத்தை முதன்முதலில் சுட்டு வீழ்த்தியது எங்கள் சக்திவாய்ந்த ராணுவம்தான் என்பதை இது உறுதிப்படுத்துகிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்கா மீண்டும் போரைத் தொடங்கினால், ஈரானிடமிருந்து இன்னும் பல அதிர்ச்சிகரமான பதிலடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.