வாஷிங்டனில் இருந்து வெளியாகியுள்ள முக்கிய தகவலின்படி, டொனால்ட் டிரம்ப் அறிவித்த ஹோர்முஸ் ஜலசந்தி கடற்படை முற்றுகை திங்கட்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது. இந்த நடவடிக்கை செயல்படுத்தப்படும் என அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு உலக அரசியல் வட்டாரங்களிலும், குறிப்பாக மத்திய கிழக்கு பகுதியில், பெரும் பதட்டத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தி என்பது உலகளாவிய எண்ணெய் போக்குவரத்திற்கான மிக முக்கிய கடல் வழித்தடங்களில் ஒன்றாகும். உலகின் பெரும்பாலான கச்சா எண்ணெய் இந்த வழித்தடம் மூலமாகவே கடந்து செல்கிறது. இப்படிப்பட்ட முக்கியமான கடல் பாதையில் அமெரிக்கா கடற்படை கட்டுப்பாட்டை அதிகரிப்பது, சர்வதேச வர்த்தகத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ராணுவத்தின் விளக்கத்தின் படி, இந்த முற்றுகை எல்லா கப்பல்களையும் பாதிக்காது. குறிப்பாக, ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் அல்லது அங்கிருந்து வரும் கப்பல்களையே இந்த நடவடிக்கை குறிவைக்கும் என குறிப்பிட்டுள்ளது. அதாவது, ஈரானின் கடல் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது. இதற்கு மாறாக, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் , கத்தார் மற்றும்சவூதி அரேபியா போன்ற நாடுகளுடன் தொடர்புடைய கப்பல் போக்குவரத்துக்கு எந்தத் தடையும் இருக்காது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் அரசியல் சார்புகளை பாதுகாக்கும் முயற்சியில் இருப்பது வெளிப்படுகிறது.
அமெரிக்க மத்திய கட்டளை மையமான சென்ட்காம் (CENTCOM) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் அல்லாத துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களின் சுதந்திரமான போக்குவரத்தில் எந்தவிதமான தடையும் இருக்காது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், ஈரானிய துறைமுகங்களுடன் தொடர்புடைய அனைத்து கப்பல்களுக்கும் இந்த முற்றுகை கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, ஈரானின் பொருளாதாரத்திற்கு நேரடி அழுத்தமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், எண்ணெய் ஏற்றுமதியே ஈரான் நாட்டின் முக்கிய வருவாய் ஆதாரமாகும். இதை குறிவைத்து நடவடிக்கை எடுப்பதன் மூலம், ஈரானை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும், இந்த முடிவு சீனா போன்ற உலகளாவிய சக்திகளுக்கும் மறைமுக எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. சீனா, ஈரானிய கச்சா எண்ணெயின் முக்கிய நுகர்வோராக இருந்து வருகிறது. இதனால், இந்த முற்றுகை சீனாவின் எரிசக்தி தேவைகளுக்கும், அதன் பொருளாதார திட்டங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அதேவேளையில், ஈரான் மற்றும் சீனா இடையிலான வர்த்தக உறவுகளும் சவால்களை சந்திக்கக்கூடும். சில சர்வதேச அரசியல் வட்டாரங்கள், இந்த நடவடிக்கையை ஒரு சாதாரண பாதுகாப்பு நடவடிக்கையாக அல்லாமல், “மறைமுக போர் அறிவிப்பு” என்ற கோணத்திலும் பார்க்கின்றன. குறிப்பாக, ரஷ்யா மீது அமெரிக்கா எடுத்த அணுகுமுறையைப் போலவே, ஈரானின் எண்ணெய் வருவாயை குறைத்து அதன் அரசியல் மற்றும் இராணுவ சக்தியை தளர்த்தும் முயற்சியாக இதை அவர்கள் விளக்குகின்றனர்.
மேலும், இந்த நடவடிக்கை உலகளாவிய எண்ணெய் சந்தைகளிலும் அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடும். எண்ணெய் விலைகள் உயர வாய்ப்பு இருப்பதால், பல நாடுகளின் பொருளாதாரத்துக்கும் இது தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. குறிப்பாக, எண்ணெய் இறக்குமதியை அதிகமாக சார்ந்துள்ள நாடுகள் கூடுதல் அழுத்தத்தை சந்திக்க நேரிடலாம். மொத்தத்தில், ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகை என்பது மத்திய கிழக்கு அரசியல் சூழலை மட்டுமல்லாமல், உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சமநிலையையும் பாதிக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய மாற்றமாகக் கருதப்படுகிறது. அடுத்த சில நாட்களில் இந்த நிலைமை எவ்வாறு முன்னேறும் என்பது உலக நாடுகளின் கவனத்தையும் பதற்றத்தையும் அதிகரித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.