இனவெறியர் என்று முத்திரை குத்தப்படும் அபாயம் இருந்தபோதிலும், ஐக்கிய ராச்சியத்தில் உள்ள இந்திய மற்றும் பாகிஸ்தானிய புலம்பெயர்ந்தோரை குறிவைக்கும் தனது குடியேற்ற எதிர்ப்பு கருத்துக்களால் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
ரிஃபார்ம் யுகே கட்சியிலிருந்து பிரிந்து சமீபத்தில் 'ரெஸ்டோர் பிரிட்டன்' என்ற வலதுசாரி அரசியல் கட்சியைத் தொடங்கிய ரூபர்ட் லோவ், "பிரித்தானியர்களுக்குக் கிடைத்திருக்க வேண்டிய வேலைகளை "லட்சக்கணக்கான பாகிஸ்தானியர்களும் இந்தியர்களும்" பறித்துக்கொள்வதாக கடுமையாக குற்றம் சாட்டினார். "வேலையில்லாத பிரிட்டானியர்கள் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்வதற்காக, லட்சக்கணக்கான பாகிஸ்தானியர்களையும் இந்தியர்களையும் நாம் இறக்குமதி செய்ய வேண்டும் என்று நான் நம்பவில்லை," என்று அவர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"அது என்னை ஒரு இனவெறியாளனாக ஆக்கினால், அப்படியே ஆகட்டும்," என்றும் அவர் கூறினார். முந்தைய பதிவு ஒன்றில், வடமேற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளுக்குச் செல்வது "ஒரு வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டது" போல் இருப்பதாக லோவ் கூறியிருந்தார். "இது தற்செயலாக நடக்கவில்லை, மூன்றாம் உலக நாடுகளிலிருந்து மில்லியன் கணக்கான குறைந்த திறன் கொண்ட புலம்பெயர்ந்தோரை இறக்குமதி செய்ய, தொழிலாளர், சீர்திருத்த மற்றும் பழமைவாத அரசியல்வாதிகள் திட்டமிட்டு எடுத்த முடிவு இது. இது ஒரு பெருகிவரும் பிரச்சனை. நிலைமை சீரடையவில்லை, மாறாக மோசமாகிக்கொண்டே இருக்கிறது. அதுவும் மிக வேகமாக," என்று அவர் தனது நிலைபாட்டைனைக் கூறினார்.
மேலும் அவர், இங்கிலாந்தில் உள்ள முஸ்லிம் மக்களைக் குறிவைத்து, "புர்கா அணிந்த இரண்டு, மூன்று, நான்கு பெண்களுடன் ஆண்கள் சுற்றித் திரிவதைப் பார்ப்பதை நான் வெறுக்கிறேன்" என்று கூறினார். மான்செஸ்டரின் பிரதான வீதிகள் இஸ்லாமிய இடங்களாக மாறி வருவதாக லோவ் மேலும் குற்றம் சாட்டினார். மேலும் குடியேற்றத்தை ஒரு வகையான "காலனித்துவம்" என்று விவரித்தார். "இது இயல்பானது அல்ல," என்று அவர் கூறினார். "பிரிட்டிஷ் குடும்பத்தால் நடத்தப்படும் வணிகங்கள் விரட்டியடிக்கப்படுகின்றன, இது ஒரு கையகப்படுத்தல். காலனித்துவம். ராட்க்ளிஃப் கூறியது சரிதான்," என்று அந்த சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறினார்.
பிரிட்டிஷ் பெண்கள் இனி இந்தத் தெருக்களில் நடமாடுவதற்கு வசதியாக உணர்வதில்லை என்று லோவ் மேலும் கூறினார். "ஒரு காலத்தில் அவர்களுடைய தெருக்களாக இருந்தவை. அவர்களைக் குறை சொல்ல முடியுமா? பெண்களைக் கேவலமாக நடத்தும் கலாச்சாரங்கள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த ஆண்களே இப்போது இந்த இடங்களில் பெரும்பான்மையாக உள்ளனர். மக்கள்தொகை யதார்த்தம் அவர்களைக் கடுமையாகத் தாக்குகிறது. இந்த மக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். மிக அதிகமான குழந்தைகள், பெரும்பாலும் வரி செலுத்துவோரின் பணத்தில். இது ஒரு நிதர்சனமான உண்மை. பாராளுமன்றத்தில் வேறு யாரும் இதைப் பற்றிக் கவலைப்படக்கூட மாட்டார்கள்," என்று அவர் சரமாரியாக கூறினார்.
பின்னர் அவர், "பிரிட்டனை மீட்டெடுப்போம்" என்று அழைப்பு விடுத்து, "புர்கா, ஷரியா நீதிமன்றங்கள், உறவுமுறைத் திருமணம், ஹலால் அறுத்தல், பொதுத் தொழுகையில் ஆதிக்கம் செலுத்துதல் ஆகியவற்றைத் தடை செய்யுங்கள். பெருந்திரளான குடியேற்றத்தைத் திருப்புங்கள். வெளிநாட்டு இஸ்லாமியவாதிகளை நாடு கடத்துங்கள். அரசியல் இஸ்லாத்தை முடிவுக்குக் கொண்டு வாருங்கள். நாங்கள் வாயை மூடிக்கொண்டு, இதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் ஏன், அரவணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லப்படுகிறோம். இனிமேலும் முடியாது. நாங்கள் மறுக்கிறோம். 'பிரிட்டனை மீட்டெடுப்போம்' இயக்கம், செய்ய வேண்டியதைச் செய்யும். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்," என்றார்.
லோவின் கருத்துக்கள் விரைவில் ஒரு சர்ச்சையைத் தூண்டின; சமூக ஊடகப் பயனர்கள் அவரை "இனவெறியர்" என்று அழைத்ததோடு, பிரிட்டனின் காலனித்துவ கடந்த காலத்தை அவருக்கு நினைவூட்டினர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.